ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை

பதிகங்கள்

Photo

புலர்ந்தது போதென்று புட்கள் சிலம்பப்
புலர்ந்தது போதென்று பூங்கொடி புல்லிப்
புலம்பி னவளோடும் போகம் நுகரும்
புலம்பனுக் கென்றும் புலர்ந்தின்று போதே.

English Meaning:
Dawn of Janana Eternal Day-Light

``Dawn1 is it`` —thus shrilled the Birds2,
``Dawn is it`` — thus, the flower-like Damsel3
Separation fearing, bewailed;
With Her in eternal union the Lord joyed;
And for Jiva no more the dawn
No more the separation.
Tamil Meaning:
தலைவன் தலைவியர் இன்பமாகக் கூடியிருத்தற் குரிய காலம் இராக்காலம். பொழுது விடிந்துவிட்டால், தலைவன் துயிலை விட்டு வெளியே அறம், பொருள் ஆகியவற்றின் செயல்களில் செல்லுதற்கு உரியன். பொழுது விடிதலைத் தலைவன் தானே உணராவிடினும் அதனை அவனுக்கு, ``கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்``3 என்றபடி சிறப்பாகக் கோழி கூவ, அதனுடன் மற்றைப் பறவைகளும் ஒலித்து அறிவிக்கின்றன. அதனால் பொழுது விடிந்ததை நன்குணர்ந்தும் தலைவர் சிலர் விரைந்தெழுந்து வெளிச் செல்வதில்லை. அது நிற்கத் தலைவியருள்ளும் ஒரு சிலர் தலைவனை எழ விடாது புலம்புவர். இவ்வகையில் எவ்வகையிலோ, புட்கள் ஒலித்தும் எழுந்து வெளிச்சொல்லாதவர்கட்குப் புட்கள் ஒலித்தாலும், மற்றும் என்ன நிகழ்ந்தாலும் எப்பொழுது பொழுது விடிவதேயில்லை. (பகலாயினும் இரவேயாய் இருக்கும்.)
Special Remark:
மக்கள் வாழ்க்கையில்,
``முப்பதாம் ஆண்டளவில் மூன்றற் றொருபொருளைத்
தப்பாமல் தன்னுட் பெறானாயின் - செப்பும்
கலையளவே யாகுமாம்; காரிகையார் தங்கள்
முலையளவே யாகுமாம் மூப்பு``
என்ற ஔவையார் வாக்கின்படி, கற்பன கற்று, அறிவன அறிந்து அறத்திற்குரியராம் தன்மை பெறுதற்குரிய காலம் முதல் முப்பது ஆண்டுகளாகும்.
பின்பு இல்லாளோடு கூடி இன்பம் நுகர்ந்து, அறத்தையும் தேடிக்கொள்ளுதற்குரிய காலம் அடுத்த முப்பதாண்டுகளாகும். அஃதாவது அறுபதாம் ஆண்டு முடியவாம். பின்பு உலகப்பற்றை விடுத்துத் துறவு பூணுதல் வேண்டும். இதுபொதுவான ஒரு முறை. சிறப்பாக இல்லறத்திற் செல்லாமலே உள்ளத்தில் பற்றில்லையாயின் துறவை மேற்கொள்ளுதல் சிறப்புடையதே.
தமிழாசிரியர் கூறும் துறவு, `நாட்டை விடுத்துக் காட்டிலே தான் வாழவேண்டும்` என்பதன்று. `பற்றற்று இருத்தல் வேண்டும்` என்பதே. பற்றில்லாதவர் உடல் நிலைமையைப் பொறுத்து எங்கிருப்பினும் துறவரே. `நாட்டை விடக் கூடாது` என்பதில்லை. விடுதல் விடாமை அவரவரது உடல் நிலையைப் பொறுத்தது.
துறவற இயலில் துறவு நிலையைப் பலவகையாக விளக்கிய திருவள்ளுவர் `நாடு, காடு` என்னும் இரு வாழ்விடங்களில் எதனையும் வரையறுக்கவில்லை.
அறுபதாண்டு வரையில் இன்பம் நுகரும் காலமாக வகுக்கப் பட்டமையால், அந்தக் காலத்தை `இராக் காலம்` என்றும், அறுபதாண்டு கடந்ததை, `பொழுது விடிந்துவிட்ட காலம்` என்றும் நாயனார் கூறியருளினார்.
அறுபதாண்டு கடந்து விட்டதை ஒவ்வொரு தன் மகனும் அறிவான். ஆயினும், உலகப் பற்று அறது அதனையே அவன் பற்றிக் கிடப்பதற்கு, அவனுடைய மனநிலை அல்லது குடும்பச் சூழ்நிலை இரண்டில் எந்த ஒன்றும் காரணமாகலாம். அதனையே நாயனார் பொழுது விடிந்தும் படுக்கையை விட்டு வெளிவாராதவனது தன்மையாகக் கூறினார்.
``பூங்கொடி`` என்பது உருவகம். ஆகவே, அஃது அஃறிணைப் பெயராய், பூங்கொடி புல்லி`` என்பது, `பூங்கொடியைப் புல்லி` என இரண்டாவதன் தொகையாகவும், `பூங்கொடியாற் புல்லப்பட்டு` என மூன்றாவதன் தொகையாகவும், `புலி கொன்ற யானை` என்பது போலத் ``தடுமாறு தொழிற் பெயராய்``* நின்றதாம். புலம்பினவள் - தனிமையைப் பொறாதவள். அஃது இங்குக் குடும்பச் சூழ்நிலையைக் குறித்தது.
புலம்பன், நெய்தல் நிலத்தலைவன். நிலத்திற்கு உரியது இரங்கல். எனவே, `இத்தகைய தலைவன் இரக்கத்திற்கு உரியவன்` என்பது குறிப்பு.
கோழி கூவுதல், நாள் நிலைச் சுவடிகள் ஒருவனது ஆண்டளவைத் திட்டவட்டமாகக் காட்டுதல். பிற புட்கள் ஒலித்தல், உடம்பில் நரையும், திரையும் முதலானவை தோன்றுதல் `மனத்திட்பம் இல்லாதவனுக்கு எவை நிகழ்ந்தும் என்ன பயன்` என்றற்கு. `புலம்பனுக்கென்றும் புலர்ந்தின்று போதே`` என்றார்.
இதனால், அறநூல் முறைப்படி வாழாதவர் மக்கட் பிறப்பின் பயனை எய்தாமை உள்ளுறையாகக் கூறப்பட்டது.