ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை

பதிகங்கள்

Photo

பள்ளச்செய் ஒன்றுண்டு பாழ்ச்செய் இரண்டுள
கள்ளச்செய் அங்கே கலந்து கிடந்தது
உள்ளச்செய் அங்கே உழவுசெய் வார்கட்கு
வெள்ளச்செய் யாகி விளைந்தது தானே.

English Meaning:
Turiya State

A deep field there is one;
Waste fields two2 are there;
Another alien field3 with them lay mingled;
Those that plough the field of heart
For them the field fed with water,
Lay ripe in harvest rich.
Tamil Meaning:
மக்களில் ஒவ்வொருவருக்கும் உள்ளது ஒரு நிலந்தான். அந்த நிலத்தில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே நீர் எளிதில் பாய்ந்து விளைவைத்தரக் கூடியதாய் உள்ளது மற்றை இரண்டு பகுதிகள் நீர் செல்லாது, முரம்பாய்க் கிடக்கின்றன. மூன்றிலும் உழமுடியாதபடி கருங்கற்கள் உள்ளன. இவற்றைச் சமப்படுத்தி உழ வல்லவர்கட்கு அந்த ஒரு நிலமே வேண்டுமளவு நீர் தேங்கி நிற்கின்ற நிலமாய், நல்ல விளைவைத் தருகின்றது.
Special Remark:
ஒரு நிலம் - ஆன்ம அறிவு. மூன்று பகுதிகள் `கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மூன்று அவத்தைகள் (இம்மூன்றையும் சகலத்தின் பகுதியாகவே கொள்க.) பள்ள நிலம், அஃதாவது, நன்செய் - சுத்தாவத்தை. `நின்மலாவத்தை` எனப்படுவதும் இதுவே. இதில் திருவருளின் வழிச்சிவம் பிரகாசித்து நிற்றலால், நீர் நன்கு பாயும், ``பள்ளச் செய்`` எனப்பட்டது. ஏனைக் கேவல சகலங்கள் திருவருள் விளக்கம் இன்றி இருத்தலால், ``பாழ்ச் செய்`` எனப்பட்டன. ``கல்ல செய்`` என்பது, எதுகை நோக்கித் திரிந்தும், ஒற்றுமிக்கும் நின்றது. கல்ல செய் - கற்களை உடைய நிலம். இங்ஙனம் கொள்ளாது, `கள்ளம்` என்றே கொள்ளின், கள்ளத்திற்கும், செய்க்கும் இயைபு யாதும் இன்மை அறிக. `கல்லச் செய்` என்றே பாடம் ஓதி `ஒற்று மிக்கது விகாரம்` என உரைப்பினும் ஆம். ``உள்ளச் செய்`` என்பதிலும் சகர ஒற்று, விரித்தல் `இள்ள செய்யாகிய அங்கே` என்க. ``உள்ள செய்`` என்றதனால் வேறு செய் இன்மை பெறப்பட்டது. ``உழவு செய்வார்`` என்றது, சொல்லுவாரது குறிப்பால், `செய்ய வல்லார்க்கு` எனப் பொருள் தந்தது. பாழ்ச் செய்யிலும், கற் செய்யிலும் உழ வல்லவர் அரியராதலை அறிக. நிலம் ஒன்றையே தொல்காப்பிடனார் பகுதி பற்றி ``காடுறையுலகம், மைவரையுலகம்`` என்பன முதலாய்ப் பலபோலக் கூறினாற்போல, இவரும் ஒரு செய்யினையே பகுதி பற்றி, ``பள்ளச் செய், பாழ்ச் செய்`` எனப் பல செய்கள்போலக் கூறினார். இம்மூன்றிலும் நிறைந்துள்ள கற்களாவன ஆணவ மலத்தின் சத்திகள். ஆகவே, இங்கு, சுத்தம் ஆவதும் சகலத்திற் சுத்தமே. மூன்றையும் சமப்படுத்தி உழுதலாவது, குருவுபதேசத்தை நனவிலே மட்டுமன்றிக் கனவிலும் மறவாது உணர்தலாம்.
``துஞ்சலும், துஞ்சல் இலாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாடொறும்``3
``துஞ்சும் போதும் சுடர்விடு சோதியை``9
என்றாற்போல ஆசிரியன்மார் அருளிச் செய்தலை அறிக. வெள்ளம் - நீர்த் தேக்கம். ``வெள்ளச் செய்யாகி`` என்றது, முதற்கண் கூறிய, ``பள்ளச் செய்`` போலவே ஆகி - என்றதாம்.
இதனால், `குரு உபதேசத்தை எந்நிலையிலும் மறவாது உணர்வார் உலகில் உலாவினும் முத்தராய் விளங்குவர்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.