ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை

பதிகங்கள்

Photo

கொட்டுக் குந்தாலி இரண்டே இரண்டுக்கும்
கொட்டுக்குந் தாலிக்கும் பாரை வலிதென்பர்
கொட்டுக்குந் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும்
இட்டம் வலிதென்பர் ஈசன் அருளே.

English Meaning:
Lord`s Love is Supreme

Two there are, the wedding drum and the wedding Thali;
Stronger than the wedding drum and thali is the crow-bar
Stronger than the drum, thali and crow-bar
Is the love that comes of Lord`s Grace.
Tamil Meaning:
கொட்டு - மண்வெட்டி. குந்தாலி - கோடலி. `இந்த இரண்டே உள்ளன` என்க. `உள்ளன` என்பது சொல்லெச்சம்.
Special Remark:
``இரண்டுக்கும்`` என்பதை இரண்டாம் அடியில், ``குந்தாலிக்கும்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. இரண்டாம் அடியில் `கோட்டுக் குந்தாலி` என்பது உம்மைத் தொகையாய் நின்றது. அதன் ஈற்றில் நான்கனுருபு. உறழ்பொருளாகிய ஐந்தாவதின் பொருளில் வந்தது. ஈற்றில் உள்ள உம்மை சிறப்பு.
பாரை - கடப்பாரை. ``பாரைக்கு நெக்குவிடாப் பாறை, பசுமரத்தின் - வேருக்கு நெக்குவிடும்``l என்னும் ஔவையார் வாக்கைக் காண்க.
மண்வெட்டி ஈர மண்ணைத்தான் பறிக்கும். கோடாலி மரத்தை மேலோடு வெட்டும். பாரை வலிய நிலைத்தையும் அகழும். மரத்தை வேரேடும் சாய்க்கும். ஆகவே, மண்வெட்டி, கோடாலி இரண்டையும் விடப் பாரை வலியது. ``இரண்டே உள; பாரை வலியது`` என்றதனால், பாரை கிடைத்தற்கரிதாதல் கூறப்பட்டது.
மண்வெட்டி இடைகலை நாடி, இது பூரிப்பால் நோயைப் போக்கும். கோடலி, பிங்கலை நாடி, இஃது இரேசகத்தால் மாசு நீக்கும். பாரை, சுழுமுனை நாடி. இது கும்பகத்தால் இறப்பு நீக்கல், அறியாமையைப் போக்கல் ஆகியவைகளைச் செய்யும். எனவே, முன்னிரண்டடிகளால் வாசி யோகத்தின் சிறப்புணர்த்தப்பட்டதாம்.
இட்டம் - வெளிப்படை பொருளில், `இட்ட+அம்` எனப் பிரித்து, மேகம் பெய்த மழையையும். (அம்-நீர்) உள்ளுறைப் பொருளில் அன்பையும் குறித்தது. அன்பு, சிவ பத்தி.
மழை நீர் நிலத்தையும் எளிதில் அகழும்; மரங்களையும் எளிதில் வேரோடு கல்லிவிடும். ஆகவே அது, மண்வெட்டி, கோடாலி, பாரை மூன்றையும் விட வலியதாம்.
`வாசியோகத்தைவிடப் பத்தி வலிது` என்றபடி,
`ஈசன் அருள் நிலை இவ்வாறு உள்ளது` என்க.
``ஆறு பார்ப்பானுக்கு இரண்டே கண்கள்;
மாறுகோள் இல்லை; மதியுள்ளோர் சொல்லுங்கள்``
என்றால், பின்னடி முன்னடியைச் சார்ந்து வந்ததேயன்றி, உள்ளுறைப் பொருளதாகாது. (ஆறு - வழி, அல்லது யாறு. பார்ப்பான் - பார்ப்பவன்.) அஃதே போல், இங்கு, ``ஈசன் அருள்`` என்பது உள்ளுறைப் பொருள் இன்றி, முற்கூறிய பொருளைச் சார்ந்து நின்றது.