ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை

பதிகங்கள்

Photo

ஐயென்னும் வித்தினில் ஆனை விளைப்பதோர்
செய்யுண்டு செய்யின் தெளிவறி வார்இல்லை
மையணி கண்டன் மனம்பெறின் அந்நிலம்
பொய்யொன் றுமின்றிப் புகல்எளி தாமே.

English Meaning:
Sahasrara Centre of Liberation

With the seed of Lord
There is a field
Where the Jiva ripens
That field they know not;
If the Grace of Blue-throated Lord there is,
Easy to enter that field
In Truth it is.
Tamil Meaning:
`ஐ` என்று வியக்கத்தக்க மிகச் சிறிய பொருளையே (கடுகு, மிளகு, கொத்துமல்லி போன்ற பொருள்களையே) விளைக்கக் கூடிய விதைகளை இட்டால், அவற்றிலிருந்தே ஆனைபோன்ற மிகப்பெரிய (மாங்காய், தேங்காய், பலாக்காய் போன்ற) பொருள் -களையே விளைவிக்கின்ற அதிசய நிலம் ஒன்று உண்டு. அஃது அத்தன்மைத்தாதலை அறிந்து அதில் விதை விதைக்கின்றவர்கள் உலகத்தில் பலர் இல்லை. அந்த நிலம் சிவன் மனம் வைத்தால், தவறாமல் எளிதில் அடையப்பெறுவதாகும்.
Special Remark:
`ஐ` என்பது வியப்புப் பொருட்டாய், வியப்பிற்குக் காரணமான, ``புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம்`` என்னும் நான்கனுள் சிறுமை பற்றி வந்தது. ஆனை, உவமையாகுபெயராய் அதுபோலும் பொருளை உணர்த்திற்று. ``தெளிவு`` என்பது தெளியப்படும் தன்மை குறித்து நின்றது. ``மனம்`` என்றது. மனத்தின் உவகையை, `நிலம், சிவனது திருமேனி வகைகள்` எனவும், விதைகள் அவற்றிற் செய்யும் சரியை, கிரியை, யோகம் என்னும் வழிபாட்டு வகைகள் எனவும் கொள்க. சிலந்தி ஒன்று வெண்ணாவற் கீழ் உள்ள இலிங்கத்திற்கு வாய் நூலால் பந்தலிட்டுச் சோழ மன்னன் ஆயினமையும், எலியொன்று, திருக்கோயில் உள்ள விளக்கைத் தூண்டி, மூவுலகங்களையும், அடிப்படுத்து ஆண்டமகாபலிச் சக்கரவர்த்தியாயும் ஆயினமை போன்றவற்றை வைத்து இவ்வாறு கூறினார். முதல் இரண்டு அடிகளில், பெரியோர்க்குச் செய்த உபகாரம் பொருளால் சிறிதாயினும் பயனால் பெரிதாதல் அறநூல்கட்கெல்லாம் உடன்பாடாதலின் தேவர்க்கெல்லாம் தேவனாம் பெரியோனுக்குச் செய்யும் வழிபாடு பொருளால் மிகச் சிறிதாயினும், பயனால் மிகப் பெரிதாம்` எனச் சிவபுண்ணியத்தின் சிறப்பை உள்ளுறை வகையால் உணர்த்தி அதனைச் செய்யாதார் நிலைக்கு இரங்கியவாறு. `அச்செயின்` எனச் சுட்டு வருவிக்க. ``தவமும் தவம் உடையார்க்கு ஆகும்``8 என்றபடி. `சிவபுண்ணியத்தில் மனம் செல்லுதற்கும் சிவ புண்ணியம் வேண்டும்` என்பது குறிக்கப்பட்டது.