ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை

பதிகங்கள்

Photo

எழுதாத புத்தகத்(து) ஏட்டின் பொருளைத்
தெருளாத கன்னி தெளிந்திருந் தோத
மலராத பூவின் மணத்தின் மதுவைப்
பிறவாத வண்டு மணம்உண்ட வாறே.

English Meaning:
Immortality Through Yoga

The Truth of the Unwritten Book,
The Immaculate Virgin in clarity chanting,
The nectar of Flower, unopened until then, Gushed forth;
As the Bee its fragrance drank,
Unborn it became.
Tamil Meaning:
எழுத்துக்கள் எழுதப்படாத ஏடு ஒன்று உள்ளது; அதை, `புத்தகம்` என்கின்றனர். அந்தப் புத்தக்கத்தைப் பார்க்காமலே ஒரு பெண் அதில் உள்ள பொருளைத் தானே உணர்ந்து, பிறருக்கும் உணர்த்துகின்றாள். (இது நிற்க. மற்றொரு செய்தி.) மலராத மலர் ஒன்று உள்ளது; அதில் தேனை, பிறவாத வண்டு ஒன்று அதன் மணத்தின் வழியாக அறிந்து சென்று உண்கின்றது. (இவைகளை யெல்லாம் `நம்ப முடியாது` என்றாலும், உண்மையான அதிசய நிகழ்ச்சிகளாய் உள்ளன.)
Special Remark:
எழுதாத ஏடு, இறைவனது ஞான சத்தி. எல்லாப் பொருள்களும் முதலில் அதன்கண் இயல்பாகத் தோன்றுகின்றன. கன்னி, அவனது கிரியா சத்தி அது ஞான சத்தியின் வேறன்மையால், ஞான சத்தியில் தோன்றியவற்றை அப்படியே உயிர்களை அறிவித்தும், செய்வித்தும் நடாத்துகின்றது. இது முதற்கண் கூறப்பட்ட பொருள்.
இனி, மலராத பூ, அரும்பாய்த் தோன்றிப் போதாய் முதிர்ந்து மலராத, அதனால், பின்பு வாடாத பூ, சிவம் என்றும் ஒருபடித்தான இன்பமாய் உள்ளது. பிறக்கும் பொழுது புழுவாய்ப் பிறந்து பின்பு வண்டாக மாறுகின்ற வண்டுகள் போலாது, பிறக்கும்பொழுதே வண்டாய்ப் பிறந்த வண்டு, முற்பிறவிகளிற்றானே ``புறச்சமய நெறி நின்றும், அகச்சமயம் புக்கும், புகல் மிருதி வழி உழன்றும் ... ...``3 வருதலாகிய படிகளையெல்லாம் கடந்து, பிறக்கும்பொழுதே சித்தாந்த சைவ மரபில் பிறந்த ஆன்மா. மணம், அருள்ஒளி. தேன், சிவானந்தம். ``சித்தாந்தத்தே சிவன் தன் திருக்கடைக்கண் சேரத்திச் - செனனம் ஒன்றிலே சீவன் முத்தராக வைத்து ஆண்டு, மலம் கழுவி, ஞானவாரி மடுத்து ஆனந்தம் பொழிவன்`* ஆதலின் பிறக்கும்பொழுதே சித்தாந்த சைவ மரபிற் பிறந்த ஆன்மாவை, ``பிறவாத வண்டு`` என்றார்.
``ஓத`` என்னும் செயவெனெச்சம் நிகழ் காலத்ததாய் நிற்க, `உண்டவாறு வியப்பு` எனச் சொல்லெச்சத்தோடு முடிந்தமையால் `இரண்டும் வியப்பு` என்றதாயிற்று. `மணத்தால் உண்ட` என ஆல் உருபு விரிக்க. ஈரடி உயிரெதுகை வந்தது.
இதனால், உயிர்கட்கு ஞானம் நிகழுமாறும், பிறக்கும் பொழுதே ஞானத்திற்கு உரியவராய்ப் பிறந்தோரது சிறப்பும் கூறப்பட்டன.