ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை

பதிகங்கள்

Photo

அடியும் முடியும் அமைந்ததோர் அத்தி
முடியும் நுனியின்கண் முத்தலை மூங்கில்
கொடியும் படையுங் கொளும்சார்பை யைந்து
மடியும் வலம்புரி வாய்த்தவ் வாறே.

English Meaning:
Yoga Vanquishes Tattvas

There is an Athi tree1 with root and top.
At the tip end high is the Bamboo2 triple crested3,
With flag and army are evil spies five times five4
Destroyed they shall be,
And the Sacred Conch in victory blow5.
Tamil Meaning:
வேரும், கிளையும் அமைய வேண்டிய முறையிலே அமைந்த அத்தி மரம் ஒன்று உள்ளது (அத்தி - எலும்பு. அது சிலேடையாய், உள்ளுறையில் உடம்பைக் குறித்தது. உடம்பிற்கு வேர் வித்தியா தத்துவத்தில் உள்ள மாயா தத்துவம். கிளை, பிருதிவி தத்துவம்.)
Special Remark:
முடியும் நுனி - கிளைக்கும் மேல் உள்ள இடம். மூங்கில், சுத்த தத்துவம். முத்தலையாவன அதிகார போக, லய தத்துவங்கள்.
கொடியும், படையும் தாத்துவிகங்கள். கொடி, படர்க்கொடி. படை, இலை தளிர் பூ முதலியவற்றின் கூட்டம். கொள் சார்பு - கொடி கட்கும், படைகட்கும் பற்றாய் உள்ளவை. ``ஐயைந்து`` உம்மைத் தொகைப் பத்து. அவை ஞானேந்திரியம் ஐந்தும், கண்மேந்திரியம் ஐந்தும். இவைகளாலேயே உயிர்க்கு எல்லா அறிவும், செயலும் நிகழும்.
அத்திப்பழம் உணவாகவும், மூங்கில் பலவற்றுக்குக் கருவி யாகவும் நமக்கு உதவுவனபோலத் தோன்றினாலும் இவையெல்லாம் பேருதவிகள் அல்ல. இவற்றின் வேறாய் இனியதொரு சோலை உண்டு; அதனை அடைந்தால், அல்லல்கள் அற்று, அமைதியுடன் வாழலாம். ஆயினும் அந்தச் சோலையை இந்த அத்தி மரத்தின் வழியாகவே அடைய வேண்டியுள்ளது. அதனால் இந்த அத்தி மரத்தையும் புறக்கணித்தற்கு இல்லை.
வலம்புரி - நந்தியாவட்ட மலர். அது நல்லதொரு சோலையைக் குறித்த குறிப்பு மொழி. மடிதல், இங்கு, அல்லலற்று அமைதியுடன் இருத்தல். ``சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே``3 என முதற்கட் கூறியதையும் நினைக.
சோலை, முத்தி நிலை. `அதனை அடைதற்குச் சாதனமாகவே இவ்வுடம்பு அமைந்துள்ளது` என்பதை, ``வலம்புரி வாய்த்தது அவ் ஆறே`` என்றார். ஆறு - வழி. `ஆற்றால்` என உருபு விரிக்க. ஏகாரம், பிரிநிலை.
இதனால், முன்பு, ``உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே`` என வெளிப்படையாகக் கூறப்பட்ட பொருள் உள்ளுறையாகக் கூறி வலியுறுத்தப்பட்டது.