ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை

பதிகங்கள்

Photo

பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரு மின்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ப் பொழியுமே.

English Meaning:
Control Senses

In Brahmin`s home are Milk Cows Five
With none to herd them, they stray uncontrolled,
If a cowherd there is, and controlled they are,
The Five Cows will milk in abundance give.
Tamil Meaning:
பார்ப்பான், கடவுளைத்திரு உருவிலாயினும், தீயிலாயினும் வைத்து வழிபடுவன், அவனுக்குப் பாற்பசுக்கள் இன்றி யமையாதன. அத்தகைய பசுக்கள் ஐந்து உள்ளன. ஆயினும் பார்ப்பான் பசுமேய்க்க மாட்டான். மேய்ப்பவர் வேண்டும். அவர் யாரும் அவனுக்குக் கிடைக்கவில்லை. அதனால் அவன் அவிழ்த்து ஓட்டிய அப் பசுக்கள் தம் மனம்போன போக்கிலே போய்க் கொட்டிலுக்கு வாராமலே உள்ளன. மேய்ப்பவர் கிடைத்தால், அவை வழிப்பட்டு வந்து வேண்டிய அளவு பாலைக் கொடுக்கும். (மேய்ப்பவர் கிடைக்கவில்லையே!)
Special Remark:
பார்ப்பான், ஆன்மா. அகம், உடம்பு, பாற் பசு ஐந்து, இறைவனைக் கண்டும், அவன் புகழைக் கேட்டும், அவன் புகழ் பாடுதலிலே சுவைகண்டும், அவன் வழிபாட்டில் மணம் கண்டும் கைகளால் அவனுக்குரிய பொருள்களைத் தீண்டியும் உவகையடைந்து ஆன்மாவுக்கு உதவக் கூடிய `கண், காது, நா, மூக்கு, மெய்` என்னும் ஐம்பொறிகள். மேய்ப்பர், குருவின் அறிவுரைகள். அவை அப் பொறிகளை அதற்கு உதவும் வகையில் நடத்தும். அவ்வுரைகள் இல்லாமையால் ஆன்மா ஐம்பொறிகளால் வரும் பயனை அடைய இயலாமல் அலமருகின்றது` என்பதாம்.
பாற்பசு - கறவைப் பசு. ``உண்டாய், அடங்கினால்`` என்றமையால், `உண்டாயின் அடங்கும்` என்பது பெறப்பட்டது. ``பாலாய்`` என்பதில் உள்ள ஆக்கம் மிகுதி குறித்தது. `சோறு கல்லும், மண்ணுமாய் உள்ளது` என்பதிற்போல.
இதனால், குரு உபதேசம் பெறாதார், நன்னெறியை அடைய மாட்டாது அல்லல் உறுவர்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.