ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை

பதிகங்கள்

Photo

ஈற்றுப் பசுக்கள் இருபத்து நால்உள
ஊற்றுப் பசுக்கள் ஒருகுடம் பால்போதும்
காற்றுப் பசுக்கள் கறந்துண்ணும் காலத்தில்
மாற்றுப் பசுக்கள் வரவறி யோமே.

English Meaning:
Yoga Way to Transcend Tattvas

Twenty and four the cows1 that are in calf;
Better far a pitcher of milk from cows2 that yield;
When you know how to milk the cows of breath (yoga)
The other cows3 near not.
Tamil Meaning:
ஈற்றுப் பசுக்கள் - ஈன்றணிய. அஃதாவது, கன்றை யீன்று ஒன்றிரண்டு நாட்களேயான பசுக்கள். இவைகளின் பாலும் பூசைக்கோ, வேள்விக்கோ பயன்படாது. மக்களுக்கு உணவாக்கூட ஆகாது. பயன்படாமை பற்றி மேல், `மலட்டுப் பசுக்கள்` எனக் கூறியவற்றையே, `ஈற்றுப் பசுக்கள்` எனக் கூறினும் இழுக்கில்லை என்னும் கருத்தால் இங்கு இவ்வாறு கூறினார். எனவே, முன் மந்திரத்திற் கூறிய அந்த இருபத்து நான்கே இங்குக் கூறிய இருபத்து நான்கும் ஆகின்றன. முன் மந்திரத்தில், ``குட்டிப் பசுக்கள்`` எனக் கூறியவைகளை இங்கு ``ஊற்றுப் பசுக்கள்`` என்றார். `பாலைச் சுரந்து பொழியும் பசுக்கள்`` என்றபடி. `தனித் தனி ஒவ்வொரு குடம்` என்க. `குடமாக` ஆக்கம் விரிக்க. `புகுதும்` என்பது. `போதும்` என்றபடி ``காற்று`` என்பது பகாப் பதமாய்ப் பிராணனையும், `கால்+று` எனப் பகுபதமாய், கறக்கும்படி துன்புறுத்தப்படும் பசுக்களையும் சிலேடை வகையால் குறித்து நின்றது. காலுதல் - கக்குதல். அஃது இங்குப் பாலைப் பொழிதலைக் குறித்தது. காணுதல், தன்வினை. காற்றுதல், பிறவினை. காற்றுதல், இங்குப் பாலைக் கொடுக்கப்பண்ணுதல். சில பொல்லாத பசுக்கள் கன்றை யீன்றாலும், கன்றுக்கும் பால்கொடாது உதைத்துத் தள்ளும். யாரையும் கறக்கவிடா அப்படிப்பட்ட பசுக்களை அடித்துத் துன்புறுத்தியும், மடியில் மருந்து பூசியும் வலியுறுத்திப்பால் கொடுக்கப் பண்ணுவர்.
Special Remark:
``சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்``9
என்றார் திருவள்ளுவர்.
இவ்வாறு வருத்திக் கறக்கக் கறக்கும் பசுக்கள்போல இடை கலை பிங்கலைக் காற்றுக்கள் யோக முறையால் அடக்கி இயக்கப் பயன்தருதல் பற்றி அவைகளை, காற்றுப் பசுக்கள்`` எனச் சிலேடையாகக் கூறினார். மாற்றுப் பசுக்கள், காற்றுப் பசுக்களுக்கு வேறான பசுக்கள். என்றது, முதலிற் கூறிய ஈற்றுப் பசுக்களையே. வாசியோகம் பயிலுமிடத்து ஞானேந்திரிய கன்மேந்திரியங்களின் செயல் வந்து தடைசெய்ய மாட்டாமையால்,
``காற்றுப் பசுக்கள் கறந்துண்ணும் காலத்து
மாற்றுப் பசுக்கள் வரவறி யோமே``
என்றார். `காற்றுப் பசுக்களை` என இரண்டன் உருபு விரிக்க. வரவு அறியோம் - வருதலைக் காணோம்.
இதனால், `பிற சமயிகளும் ஹடயோகம் செய்யாது, தியான யோகம் செய்யின், அவரவர் சமய முத்தியை அடைவர்` என்பதும் `சித்தாந்தம் தத்துவ ஞானம் உண்டாயின், சிவஞானம் கைவந்து, சித்தாந்த முத்தி எளிதில் கிடைத்துப் பெரும்பயன் தரும்` என்பதும் உள்ளுறையாகக் கூறப்பட்டன.