ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை

பதிகங்கள்

Photo

அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டு
நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர்
மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டுபோய்த்
தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே.

English Meaning:
The Truly Great Vision the Lord in Cranial Cavity

Visioning the Banyan tree that stands Beyond,
They adore the holy Lord and in Him unite;
Those who transcend the Five Sorrows exceeding
Are the truly great;
Low at Lord`s Feet they lie;
And there they remain.
Tamil Meaning:
மக்கள் யாவரும் வினைத் தொடர்ச்சியாகிய ஆற்று வெள்ளத்தில் போய்க்கொண்டிருப்பவரே. ஆயினும் அவருள் ஒரு சிலர் மட்டும் ஆற்றின் அக்கரையில் ஓர் ஆலமரத்தையும், அதன் கீழே உடையின்றியிருக்கும் ஓர் அந்தணரையும் கண்டு வாழ்த்து கின்றார்கள். அதனால் அவ்வந்தணரால் தாம் கடலிற் சென்று விழுவதற்கு முன்னே கரைசேர்க்கவும் பெறுகின்றார்கள். மற்றவர் களும் அவ்வாறே கரை சேரலாம். ஆயினும் அவ்வாறு செய்யாமல் ஐந்து வகையான துன்பங்களை அனுபவித்துக் கொண்டு வெள்ளத் திலே மிதந்து போய்க் கொண்டிருக்கின்றார்கள்.
Special Remark:
`வெள்ளம் கடலிற் கொண்டுபோய் விடுதல் உறுதி` என்பது கருத்து.
``ஆல நீழல் உகந்த திருக்கையே;
ஆன பாடல் உகந்த திருக்கையே``3
என்பது முதலாக வரும் பல அருட்டிரு மொழிகளால் ஆலமர நிழல் சிவபிரானது இருக்கையாதல் தெளிவு. சங்க இலக்கியங்கலிலும் இது பெறப்படும். ஆகவே, ``நக்கர்`` என்றது சிவபிரானையே என்பதில் ஐயமில்லை. நடுவே - கடலில் சென்று வீழ்வதற்கு முன்பே ஆல மரத்தை அக்கரைக்கண் நிற்பதாகக் கூறியது, சிவன் வினைத் தொடர்ச்சியோடும், பிறவிப் பெருங்கடலோடும் யாதொரு தொடர்புமின்றி அகல நிற்றலைக் குறித்தற்கு. ஆற்று வெள்ளத்திற் போவாரைக் கரைக்கண் நிற்பார் கரை சேர்த்தல் கூடுமன்றி, போவாருள் ஒருவர்க்கு அது கூடாமை சொல்ல வேண்டா.
ஆற்று வெள்ளத்திற் போவாரைக் கரைக்கண் நிற்பவர் கண்டால், எவரும் தாமே சென்று மீட்பர். அதற்கு மேல், அதற்கு மேல், வெள்ளத்திற் செல்வார் அவர்களை அழைத்து வாழ்த்தினால், அந்தணர் ஒருவர் மீட்கா தொழிவாரோ? ஒழியார். ஆதலின் ``வாழ்த்திப் பயன் கொள்வர்`` என்றார்.
ஆல மரம் விரிந்து படரக் கூடியது; அதன் விழுதுகள் எத்துணைத் தூரமும் எட்டக் கூடியன. ஆகவே, ஆலமரத்தின் கீழ் உள்ள அந்தணர் அந்த விழுதுகளில் ஒன்றன் வழியாக செல்வாரை எளிதில் மீட்பார். ஆயினும் அந்தணர் வீசும் ஆலம் விழுதை ஆற்றிற் செல்பவர்கள் பற்ற வேண்டுமன்றோ! `அது செய்யாமல் ஆற்றிற் செல்பவர்கள் பற்ற வேண்டுமன்றோ! `அது செய்யாமல் பலர் ஆற்றோடே போகின்றனர்` என்பதை, ``தக்கவர் தாழ்ந்து கிடக்கின்றவாறே`` என்றார். தாழ்தல், ஆற்றில் வீழ்தல்.
ஆல மரம், வேதம். அதன் விழுதுகள், அதன் வழி நூல் சார்பு நூல்கள்.
ஆல மரமே பண்டு தொட்டு அருள் வடிவான மரமாகக் கொள்ளப்பட்டு வர, அதனை மாற்றி, அசோக மரத்தையும், அரச மரத்தையும் கொண்டவர்களையும், அவருள் ஒரு சாரார், ``நக்கன்`` என்பது, `திசைகள் தவிர வேறு ஆடை இலன் என்பதாகப் பொருள் தந்து, விபாயக நிலையை உணர்த்தி நிற்க, அதனை யறியாது, உலகியலுக்கு மாறாய், `ஆடையின்றி யிருப்பவன்` எனப் பொருள் கொண்டவர்களையும் குறிப்பிற் குறிப்பாய் உணர்த்தற்குச் சிவனை வேறோராற்றால் சுட்டாது, ``நக்கன்`` எனச் சுட்டினார்.
அசோகும், அரசும் ஆற்றிற் செல்வாரை மீட்கலாகாமை -யையும் நோக்குதல் வேண்டும்.
மிக்கவர் - எஞ்சினோர் ``அஞ்சு துயரம்`` என்பது வெளிப்படைப் பொருளில், `பல துயரம்` என்றும்` உள்ளுறைப் பொருளில் பஞ்சேந் திரியங்களின் துயரம் என்றும் பொருள் தரும். கிடக்கின்றவாறு இரங்கத் தக்கது` என எஞ்சி நின்ற சொல்லெச்சத்தோடு முடிக்க.
இதனால், முன் மந்திரத்தில் பொதுப்படக் கூறிய சமயங்களுல் ஒரு சாரனவற்று இரங்கத் தக்க நிலை வகுத்துக் கூறப்பட்டது. இதனால், காலத்திற்றானே களப்பிரர் ஆட்சி முதலிய காரணங்களால் தமிழ்நாட்டில் சிவனடியார்கட்கு இடுக்கண் தோன்றினமையை உணர்தல் கூடும்.