ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை

பதிகங்கள்

Photo

பாசி படர்ந்து கிடந்த குளத்திடைக்
கூசி யிருக்கும் குருகிரை தேர்ந்துண்ணும்
தூசி மறவன் துணைவழி எய்திடப்
பாசி கிடந்து பதைக்கின்ற வாறே.

English Meaning:
Pasa Disappears With Guru`s Guidance

In the Lagoon that is Moss covered,
Gently walking, the Shy Heron feeds;
When the Marching Warrior`s guidance got,
Pasa, to ground laid, fluttered away.
Tamil Meaning:
பாசி படர்ந்த குளம், மலத்தால் மறைக்கப்பட்ட ஆன்ம அறிவு. குளத்தில் இரைதேர்ந்து வாழும் குருகு, (பறவை) அவ்வறிவால் பயன்பெற்று வரும் ஆன்மா. பாசி படர்ந்து கிடத்தலால் குருகு தனக்குரிய இரையை எளிதில் காண இயலவில்லை. வருந்தி வருந்திச் சிறிது காண்கின்றது. அஃதாவது ஆன்மாத் தனக்குரிய சிவத்தை எப்பொழுதாவது, எவையோ சிலமுறையில் அறிகின்றது. கூசியிருத்தல் - உயிரற்றது போல ஒடுங்கியிருத்தல்.
Special Remark:
தூசி மறவன் - படைகளில் முன்னணியிற் செல்லும் வீரன். அவன் குரு மூர்த்தியை அதிட்டித்து நிற்கும் சிவன். படை வீரன் தன் போக்கிலே போய்க்கொண்டிருக்கும் பொழுது குளத்தை அடுத்துச் செல்லும் வழியை அடைவானாயின், நீர் பருக வேண்டிக் குளத்தை அடைவான்; அவனால் பாசிகள் அப்புறப்படுத்தப்படும். அப்பொழுது குருகு, தனக்கு வேண்டிய இரையை வேண்டிய மட்டும் உண்டு மகிழும். `அதுபோலக் குருமூர்த்தி தம் இயல்பில் இருப்பினும், ஒருவனது சத்திநிபாத நிலையைக் காணின், ``நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்``9 என்னும் வேட்கையால் அவனை ஏற்று அவனது பாசத்தைப் போக்குவார். அப்பொழுது அவன் `சிவத்தை நன்குணர்ந்து, சிவானந்தத்தில் மூழ்கித் திளைப்பான்` என்பதாம்.
ஆறு - முறைமை; நிலைமை. `மறவன் எய்திடப் பாசி பதைக்கின்ற நிலைமை உண்டாகும்` என ஒரு சொல் வருவித்து முடிக்க. துணை வழி, அருகில் சார்ந்து செல்லும் வழி.
இதனால், குருவருள் கிடைத்த வழியே பாச நீக்கமும், சிவப்பேறும் உளவாம்` என்பது உள்ளுறையாக உணர்தத்ப்பட்டது.