ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை

பதிகங்கள்

Photo

குடைவிட்டுப் போந்தது கோயில் எருமை
படைகண்டு மீண்டது பாதி வழியில்
உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார்
அடையார் நெடுங்கடை ஐந்தொடு நான்கே.

English Meaning:
Indriyas Obstruct the Yoga Journey

The Temple buffalo left the Shed,
It saw the Army and half-way turned;
The Chief held counsel with Minister,
The Citizens closed the Gates,
Five and Four.
Tamil Meaning:
தலைவன் ஒருவனது இல்லத்தில் கொட்டிலில் இருந்த எருமை அதைவிட்டுப் புறப்பட்டு மேயப் போந்தது. ஆயினும் உயிர்களைத் துன்புறுத்தும் படைகள் எதிரே வருதலைக் கண்டு அந்த எருமை பாதி வழியிலே திரும்பிவிட்டது. அதையறிந்து அந்தத் தலைவ -னுடைய அமைச்சன் அந்தப் படைகளை விலக்க, அந்த இல்லத்திற்கு உள்ள ஒன்பது வாயில்களுள் ஒன்றையும் ஒருவரும் அடைக்கவில்லை.
Special Remark:
`அதனால் அந்த எருமை தன் விருப்பம் போலச் சென்று மேய்ந்து பாலைச் சொரிந்து வருகின்றது` என்பது குறிப்பெச்சம்.
கோ - தலைவன்; உயிர், அதனது இல்லம், தூல உடம்பு. எருமை, பிராண வாயு. இதுவே உயிர்க்கு வலு ஊட்டுவதாய்க் கட்டுப்படுத்தி நடத்தினால் பெரும் பயனைத் தருவதாய் இருத்தல் பற்றி இதனை, வலியையும், மிகுந்த பாலைப் பொழிதலையும் உடைய எருமையாக உருவகித்தார்.
குடை, குடைபோல் அமைந்த கொட்டில். அது மூலாதாரம். மூச்சு அதனினின்றும் போதல் வெளியேபோய் வலுப்பெற்று மீறாதற்கு. படைகள் பிராரத்தத்தால் வரும் நோய்கள். இந்நோய்கள் உடம்பின் வாயில்கள் ஒன்பதையும் அடைத்து, அகால மரணத்தை உண்டு பண்ணும். இவைகளால் மூச்சும் தடைப்படும். ஆகவே, ``படை கண்டு மீண்டது பாதி வழியில்`` என்றார்.
உயிர்க்கு அமைச்சன் சித்தம். அஃது அனைத்தையும் சிந்தித்து, உயிர்ப்பாகிய எருமையைத் தன் விருப்பப்படி நடத்திச் செல்ல, அந்த எருமையைத் தடுத்து நிறுத்தற்கு, உடம்பாகிய இல்லத்தின் வாயிலை அடைக்க ஒருவரும் முன்வரவில்லை. எனவே, எருமை தொடர்ந்து நன்கு மேய்ந்து பாலைச் சொரிந்து வருகின்றது. அஃதாவது உடம்பை எந்த நோய் முதலியனவும் அழிக்க எழவில்லை. அதனால், `வாழ்நாள் எல்லையின்றி நீட்டிக்கின்றது` என்பதாம்.
``ஊரார்`` என்றதும், படைகளையே. உள்ள, அதன் காரியமாகிய நெறிப்படுத்தி நடத்துதலைக் குறித்தது. நெடுங்கடை - பெரிய வாயில். ஐந்தொடு நான்கு - ஒன்பது.
இதனால், `வாசியோகம் புரியின், உடல், நரை, திரை மூப்புப் பிணிகள் இன்றி வலிதாக, வாழ்நாள் நீட்டிக்கும்` என்பது உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.