ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை

பதிகங்கள்

Photo

இலையில்லை பூவுண்(டு) இனவண்டிங் கில்லை
தலையில்லை வேர்உண்டு தாள்இல்லை பூவின்
குலையில்லை கொய்யும் மலர்உண்டு சூடும்
தலையில்லை தாழ்ந்த கிளைபுல ராதே.

English Meaning:
Mystic Flower Within

Leaves none, bees none, Flower there is;
Top none, sheath none, root there is;
Bunch none, Flower to pluck there is;
Head none to wear;
The Branch that bent withers not.
Tamil Meaning:
எல்லாச் சமயங்கட்கும் வேர்போன்றது திருவருள். அஃதாவது, `திருவருட் குறிப்பின்றி, எந்தச் சமயமும் உலகில் இருக்கவில்லை` என்பதாம். அத்திருவருளே உணர்ந்த சமயங்கள் வேரின்மேல் வளர்ந்து தழைத்த மரங்களாகும். திருவருளை உணராத சமயங்கள் வளராது முடம்பட்ட மரங்களாம். அவைகளையே, ``வேர் உண்டு; தலையில்லை`` என்றார்.
Special Remark:
பிறர்க்கு உறுதிப்பொருள்களை நன்கு விரித்துரைப்பாரது விரிவுரைகள், நல்லாசிரியரது உபதேசத்தின் வழி அமைந்தனவாயின், அவை பசுமையோடு தழைத்த இலைகளின் நடுவிலே பூத்த பூக்களாய், `பயன்` என்னும் தேன் உள்ளூறப்பெற்று நுகர்ந்து மகிழத் தக்கனவாய் இருக்கும். தான்றோன்றிகளாய் உள்ளாரது விரிவுரைகள் அத்தன்மை உடையன ஆகா. அவைகளையே, ``இலை இல்லை; பூ உண்டு; இன வண்டிங்கில்லை`` என்றார். இவையும் மேற்குறித்த சமயங்களின் பிரச்சாரங்களையேயாம்.
பிற சில கொள்கைகளில் வேறுபாடு உளவாயினும் கடவுட் கொள்கையுடைய சமயங்களிடையே `திருவருள் என்னும் ஓர் ஒற்றுமை உண்டு. அதனால் அவை ஒரு கொத்திலே பூத்த பூக்கள் போல விளங்கும் கடவுட் கொள்கையில்லாத சமயங்களிடையே அத்தகைய ஒற்றுமையில்லாமையால், அவை ஒன்றோடொன்று சேராத தனிப் பூக்கள் போலும். (தனிப் பூவிலும், கொத்தாய் உள்ள பூக்கள் சிறந்து நிற்றல் தெளிவு. இத்தன்மை பற்றிக் கடவுட் கொள்கையில்லாத சமயங்களை, ``(பூவுண்டு; ஆயினும்) பூவின் குலையில்லை; (அதற்குக் காரணம்) தாள் இல்லை`` என்றார். குலை - கொத்து. தாள் - காம்பு.
கடவுட் கொள்கை இல்லாவிடினும், ``நல்லதன் நலனும், தீயதன் தீமையும் இல்லன அல்ல; அங்ஙனமே அவற்றிற்கு ஏற்ற மறுபிறப்புக்களும இல்லன அல்ல``lஎனக் கொள்ளும் சமயங்கள் உள. ``அவை பலரால் எளிதில் பின்பற்றப் படுதலால், எளிதில் பறிக்க வரும் மலர்போல்வனவாம். ஆயினும் கடவுட் கொள்கை இல்லாமையால், நாற்றம் இல்லாத மலர் போலும். அதனால் அவை சூடப் பெறும் தலைகளை இல்லனவாம் - என்பதனை, ``கொய்யும் மலர் உண்டு; சூடும் தலையில்லை`` என்றார்.
இனி, மலர்கள் எளிதில் கொய்ய வருவதற்குக் காரணம், அவை பொருந்தியுள்ள கிளை தாழ்ந்திருத்தலேயாம். `அதுபோல நாற்றம் இல்லாத மலர்கள்போலும் அந்தச் சமயங்கட்கு அடி நிலை யாகிய, கடவுட் கொள்கையற்ற வெற்றறம் உலகில் நிலை பெற்றுத்தான் உள்ளது` என்பதை, ``தாழ்ந்த கிளைபுலராதே`` என்றார். புலர்தல் - உலர்தல்; வற்றுதல். கிளை வாடாமைக்குக்; காரணம், வேர் பசுமையாய் இருத்தல். `சமயங்களின் வேர் திருவருட் குறிப்பு` என நாயனார் முதற்கண் கூறியதை நினைக.
இரண்டாம் அடியின் முற்பகுதியை, `வேர் உண்டு இலையில்லை` என மாற்றி முதலிற் கூட்டியும், அதன் பின்னர், `பூவின் குலையில், (காரணம்) தாள் இல்லை` என மாற்றியும் பொருள் கொள்க. ``பூவின் குலையில்லை`` என்று மட்டுமே கூறியதால், `பூ உண்டு` என்பது பெறப்பட்டது.
இதனால், `புறப்புறம், புறம்` என்னும் இரு கூற்றுப் புறச் சமயங்களின் இழிபுகள் `மருட்கை` என்னும் மெய்ப்பாடு தோன்ற, உள்ளுறையாகக் கூறப்பட்டன.