ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை

பதிகங்கள்

Photo

போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
ஆகப் படைத்தன ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டொடு நாலு புரவியும்
பாகன் விடாவிடிற் பன்றியும் ஆமே.

English Meaning:
The Lord Drives in the Tattvas into the Infant Body

The eight constituents of Body Subtle
That ultimately leave,
The eight and ten Tattvas that sneak in,
With Purusha in them immersed,
The orifices nine,
The Kundalini that serpent-like coils,
The life breath twelve finger-measure (angula) long,
—If these, the Diving Charioteer drives not in,
Verily may be infant less than human be (say, pig).
Tamil Meaning:
வீரன் ஒருவன் ஓர் யானையையும், பன்னிரண்டு குதிரைகளையும் முறையாக வெளியே ஓட்டி நடத்தி, உள்ளே கொணர்ந்து கட்டிப் பணிபுரிதற்கு ஏற்புடைத்தாக அரசன் வெளிச் செல்லும் பொருள் எட்டும், உள்ள வந்து சேரும் பொருள் பதினெட்டுமாக, ஒன்பது வாயில்களையுடைய ஒரு கூடத்தைக் கட்டிக் கொடுத்தான். வீரன் அதில் முறையாக அந்த யானையையும், குதிரை -யையும் வைத்து நடத்தாவிடில், அவை பன்றிபோல யாவராலும் இகழப் படுவனவாய், அந்தக் கூடத்தையும அருவருக்கத் தக்கதாகிவிடும்.
Special Remark:
நாகம் - யானை. இது மனத்தைக் குறித்தது. ``தொண்டர் அஞ்சு களிறும் அடக்கி``8 என்பது போல, ஐம்பொறிகளையே யானை யாகக் கூறுதல் பெருவழக்காயினும், உண்மையில் யானைபோல அடங்காது புலன்களின்மேல் செல்வது மனமே. `மனத்தொடு கூடாத வழி, இந்திரியங்கள் விடயங்களைக் கவரமாட்டா` என்பது தருக்க மதம். இஃதே பற்றி, ``பொறிவாயில் ஐந்தவித்தான்``l என்னும் குறள் உரையில், `ஐந்து அவா` எனப் பொருள் உரைத்த பரிமேலழகர், `அவா ஒன்றுதானே; ஐந்து எப்படியாகும்` என்னும் தடையைக் கருத்துட் கொண்டு, ``புலன்கள் ஐந்தாகலான் அவற்றின்கட் செல்கின்ற அவாவும் ஐந்தாயிற்று`` என உரைத்தார். எனவே, ``ஐந்து`` என்றல் சார்பு பற்றியேயாகலான், `ஒன்று` என்பதே உண்மையாம். ஆகவே, ``அஞ்சு களிறு`` என்றல் சார்பு பற்றியேயாக, களிறு ஒன்றேயாதல் அறியப்படும். அடங்காது புலன்கள்மேற் செல்வது` மனமேயாகலான்` அதனை `யானை` என்றற்குத் தடையின்மை யறிக.
குதிரை பன்னிரண்டாவன, வெளிச்செல்லும் பன்னிரண் -டங்குல மூச்சு. பாகன் - நடாத்தும் வீரன். அவன் ஆன்மா விடுதல் - அடக்கிச் செலுத்துதல்.
ஒன்பது வாயிலையுடைய கூடம் தூல உடம்பு. அதில் வெளிச்செல்லும் பொருள்கள், `வெயர்வை, கோழை, பீளை, சளி, குறும்பி, மலம், சிறுநீர், சுக்கிலம்` என்பன.
உள்வந்து சேரும் பொருள் பதினெட்டாவன, ஞானேந்திரிய விடயங்கள் ஐந்தும், கன்மேந்திரிய விடயங்கள் ஐந்தும், காமம், வெகுளி, மயக்கம் ஆகிய குற்றம் மூன்றும், ஆதியான்மிகம், ஆதிதைவிகம், ஆதிபௌதிகம் ஆகிய துன்பம் மூன்றும், இவற்றால் ஏறும் நன்றும் தீதுமாய வினையிரண்டுமாம். முக்குற்றங்கள் அகத்து நிகழ்வன வாயினும் புறப்பொருள் ஏதுவாக அன்றி நிகழாமையறிக. வாயில்களையே கூறினாராயினும் அத்துணை வாயில்களையுடைய கூடத்தைக் குறித்தலே கருத்து.
முதற்கண் கூடத்தையே சிந்தெடுத்துக் கூறினமையால், ``பன்றியுமாம்`` என்றதன்பின், கூடம் பாழ்படுதலையுணர்த்துதல் கருத்தாயிற்று. ``பன்றியும்`` என்னும் உம்மை இழிவு சிறப்பு.
இதனால், `வாசி யோகம் செய்து, மனத்தை அடக்காவிடில் எடுத்த பிறப்பு வாளா மாயும்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.