ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை

பதிகங்கள்

Photo

கூகைக் குருந்தம தேறிக் குணம் பயில்
மோகம் உலகுக் குணர்கின்ற காலத்து
நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும்
பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே.

English Meaning:
Jiva Becomes Siva by Kundalini Yoga

When the Owl gets to the top of Kurunda tree
And realizes desire is the source of the world
Then the Snake standing in the Centre teaches (Jnana)
And Jiva, Siva becomes.
Tamil Meaning:
கூகை, கதிரவன் விளங்கி நிற்கவும் கண் தெரியாது அலமரும் பறவை. அது, சிவம் வில்கி நிற்கவும் அதனை அறிய மாட்டாது அல்லர் உறும் பெத்தான்மாவைக் குறித்தது.
கூகை பகற் குருடாயினும் அதற்கு நல்லதொரு குருந்த மரம் கிடைத்து, அதில் வாழ்கின்றது. அஃதாவது, வேதாகம வழக்கும், ஆன்றோர் ஒழுக்கமும் மிக்க கரும பூமி.
இருப்பினும், அந்தக் கூகை தன் குருடாதல் தன்மையால், அம்மரத்தில் பற்றுவன விடுவனவற்றையும் விலக்குவன கொள்வன ஆகியனவற்றையும் பிரித்தறிய மாட்டாது, தடுமாறிக் கொண்டிருக்கும் பொழுது அத்தடுமாற்றத்தின் நடுவே தெய்வம் ஒன்று திடீரென அதற்குக் கண்கொடுத்தது. ஆகவே, அந்தத் தெய்வந்தான் அந்தக் கூகைகளை வழிநடத்தும் பாகனும், உற்றுழியுதவும் நண்பனும் ஆகும்.
Special Remark:
`குணத்தால் பயில் மோகத்தை உணர்கின்ற காலத்து` என்க. குணம் - கூகையின் குணம்; குருட்டுத் தன்மை. மோகம் - திரிபுணர்வு. ``உலகுக்கு`` என்னும் நான்கன் உருபு, ``நாணற் கிழங்கு மணற்கீன்ற முளை``8 என்பது போல் ஏழாவதன் மயக்கமாய் வந்தது. நாகம் - விண்ணுலகம். ந + அகம் = நாகம். `பாவம் இல்லாத உலகம்` என்பது இதன் பொருள். அஃது ஆகுபெயராய், அங்கு வாழும் தெய்வத்தைக் குறித்தது. தெய்வம் கண் தந்ததாவது, சத்தி நிபாதம் வந்து ஞானத்தை உணரச் செய்தமை. அப்பால் அந்த சத்தியே (திருவருளே) ஆன்மாவுக்கு எல்லாமாய் உதவும்.
திணை மயக்கம், உருவக உவமைகளில் `வழு` எனக் கடியப் படாது ஆகலின், `நாகம் பாகனும், பண்பனும் ஆம்` என்றது திணை வழுவாகமையறிக.
``நாகமும்`` என்னும் உம்மை சிறப்பு, உரைசெய்தது, (கண் தெரிய) வரம் கொடுத்தது. வெளிப்படை பொருள் இறந்த காலம் ஆகற்பாற்றாயினும் உவமைகளில் சிறந்தது நோக்கி, முக்காலத்திற்கும் பொதுவாகக் கூறினார். ஆகின்ற பண்பன் உறுதுணை யாகின்ற பண்பினை யுடையவன்; நண்பன்.
இதனால், `சத்தி நிபாதத்தாலே அஞ்ஞானம் அகன்று பிரகாசிக்கும்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.