ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை

பதிகங்கள்

Photo

கூப்பிடும் ஆற்றிலே வன்கா(டு) இருகாதம்
காப்பிடு கள்ளர் கலந்துநின் றார்உளர்
காப்பிடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டுக்
கூப்பிடும் ஈண்டதோர் கூரைகொண் டாரே.

English Meaning:
Conquer Senses and Reach Siva

In the Way of Loud Call of Jiva
Is a Forest that stretches two leagues far;
Inside stand Robber that ceases and binds,
If the White Guard chases the Black thieves
And away shout them loud
Then does Jiva the Roof of Safety reach.
Tamil Meaning:
கூப்பிடு தூரத்தளவேயான குறு வழி ஒன்று உள்ளது. அதற்குள்ளே கடுமையான இரண்டு காடுகள் தனித்தனி ஒவ்வொரு காதம்போல உள்ளன. அந்தக் காடுகளில் வழிச் செல்வாரே மறித்துக் கொண்டுபோய் சிற்றறையில் அடைத்து வைக்கின்ற கள்வர்கள் வாழ்கின்றார்கள். ஒன்றும் அறியாத வழிப்போக்கர்கள் அந்தக் கள்வரை வழிகாட்டுபவராகக் கருதி அவரைப் பின் பற்றிச் சென்று, தமக்கு உதவுபவரை அழைக்க வேண்டிய நிலைமையராய் இச்சிறுவழியில் சிறு குடில் ஒன்றே புகலிடமாக அடைகின்றனர்.
Special Remark:
ஓரிடத்தில் நின்று அழைத்தல், வேறோர் இடத்தில் உள்ளவர் காதில் விழுகின்ற அளவு தூரத்தை, கூப்பிடுதூரம்` என்பர். நெடுவழியின்றிக் குறுவழி` என்றற்கு, ``கூப்பிடும் ஆறு`` என்றார். ஆறு - வழி. இந்தக் குறுவழியாவது, எண்சாண் உடம்பேயாம். இதிற் செல்லும் வழிப்போக்கர், உடம்பில்வாழும் உயிர்கள். ``வன்காடு இரண்டு`` என்பது, சொல்வாரது குறிப்பால் விளங்கிற்று. அவை `கீழாலவத்தை, மேலாலவத்தை` என்பன. அந்தக் காட்டிலே வாழும் கள்வர் கருவிகள். (தத்துவ தாத்து விகங்கள்) இவைகள் மிகுதியாக உயிரைமேல் ஏற்றினால், புருவ நடுவிற்கு மேற் செல்லவிடாது அவ் விடத்தே தடுத்து நிறுத்தலால் ``காப்பிடு கள்வர்`` என்றார். இதனால் இக்கள்வர்கள் எய்தும் பயன் மெய்யறிவாக பொருளைக் கவர்ந்து கொள்ளுதலாம். (கருவிகள் சடமாயினும் உருவக நயம் பற்றிப் பயன் எய்துவனபோலக் கூறினார்.) எண்சாண் உடம்பில் புருவநடு ஓரங்குலமே யாதலாலும் அதற்குள்ளே உயிர் நிற்றலாலும் `இந்தக் குறுவழிக்குள்ளே ஒரு சிறுகுடிலில் அடைபட்டுக் கிடக்கின்றார்கள்` என்பார், ``ஈண்டதோர் கூரை கொண்டாரே`` என்றார். ``ஈண்டு`` என்றது, முன்னர்க் கூறிய கூப்பிடு தூரத்தை. கூரையாவது குடில்.
`சிறு குடில்` எனப்பட்டது புருவ நடுவாகவே, அதன்கண் அடைபட்டிருத்தல், கேவல சாக்கிரமும், மாசகலமும் ஆயிற்று. அவற்றில் கிடைப்பன. பெரிய அளவாகக் கூறின், ஐம்புல இன்பங்களுக்குமேல் இல்லை. அவையும் கண்டதையே கண்டும், உண்டதையே உண்டும், பிறவும் இவ்வாறானவேயாம். அந்நுகர்ச்சி களும் கருவிகளின் சேட்டையால் நிலையின்றி, `சொப்பனம், சுழுத்தி` என்று இப்படியான நிலைகளால் இழக்கப்படுவனவேயாம். இவற்றை யெல்லாம் அடைபட்டிருப்பர் எண்ணி இன்னலுறுவாராயின் இந்தச் சிறுகுடிலினின்றும் தம்மை மீட்டு உதவுபவரை அழைக்கவே செய்வர். அதனால் அக்குடில், ``கூப்பிடு கூரை`` எனப்பட்டது. உதவுவது திருவருளேயாதலான் அதனை அவர்கள் அழைத்தே ஆக வேண்டும். அழைத்தவாற்றை,
``தரிக்கிலேன் காய வாழ்க்கை;
சங்கரா போற்றி! போற்றி!!``3
``தினைத்துணை யேனும் பொறேன் துயர் ஆக்கையின்
திண்வலையே``l
என்பன முதலியவாற்றான் அறிக.
திருவருளாள் உயிர் புருவ நடுவற்கும் மேலே செலுத்தப் படுமாயின் துவாதசாந்தப் பெருவெளியை அடைதலாகிய யோகா வத்தையையும் அதனையும் கடந்து அகண்டாகாரமாய் நிகழும் ஞானா வத்தையையும் எய்தும். `அவ்வாய்ப்பினைப் பெறாத உயிர்கள் சகல கேவலங்களில் நின்று புருவ நடுவை மட்டுமே மேல் நிலையாகக் கொண்டு, இருட்டறையில் கிடக்கின்றன` என்பதே இம்மந்திரத்தால் உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.