ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை

பதிகங்கள்

Photo

தோட்டத்தில் மாம்பழம் தொண்டி விழந்தக்கால்
நாட்டின் புறத்தில் நரிஅழைத் தென்செயும்
மூட்டிக் கொடுத்த முதல்வனை முன்னிட்டுக்
காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.

English Meaning:
Body No More Counts When Jiva-Siva Union is Effected

When in the Garden,
The Fruit of Mango, ripened, dropped,
What matters if Jackals outside howl?
When the Primal One was by Kundalini Fire reached,
The fleshy body that led to it,
Forever left.
Tamil Meaning:
தோட்டம் - வேதம், ஆகமம், திருமுறை ஆகிய முதல் நூல்களின் தொகுதி. அதில் பழுத்த மாம்பழம், திருவைந்தெழுத்து. ``வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே``3 என்னும் அருட்டிரு மொழியைக் காண்க.
தொண்டி விடுதல் - பழுத்து விழுதல். பழமையைக் குறிக்கும் `தொண்டு` என்னும் பெயரடியாகப் பிறந்த வினை. பழுத்த முதியோனை. `தொண்டு கிழவன்` என்பர். ``தொந்தி சரிய, மயிரே வெளிற, நிரை தந்தம் அலைய`` எனத் தொடங்கும் திருப்புகழைக் காண்க. திருவைந்தெழுத்துப் பழுத்து விழுதலாவது, சமயாசாரியர்கள் போன்ற பெயியோர்கள் கருணை மீதூர்ந்து அதனை உலகறிய எடுத்தக் கூறி வலியுறுத்துதல். நாயனார் காலத்திலும் அத்தகைய பெரியோர்கள் இருந்திருக்கலாம்.
``நமச்சி வாய வாஅழ்க நாதன்றாள் வாழ்க``9
என்றும்,
``தலையாய ஐந்தினையும் சாதித்துத் தாழ்ந்து
தலையா யினஉணர்ந்தோர் காண்பர் - தலையாய
அண்டத்தான், ஆதிரையான், ஆலாலம் உண்டிருண்ட
கண்டத்தான்` செம்பொற் கழல்``l
என்றும்,
``வாயிலே வைக்கு மளவின் மருந்தாகித்
தீய பிறவிநோய் தீர்க்குமே - தூயஏ
கம்பெருமான், தேவியொடு மன்னு கயிலாயத்(து)
எம்பெருமான் ஓரஞ் செழுத்து``
``அஞ்செழுத்துங் கண்டீர் அருமறைக ளாவனவும்,
அஞ்செழுத்துங் கற்க அணித்தாகும், - நஞ்சவித்த
காளத் தியில்யார்க்கும் கண்டற் கரிதாய்போய்,
நீளத்தே நின்ற நெறி``3
என்றும் அருளிச்செய்த ஆளுடைய அடிகள், காரைக்காலம்மையார், நக்கீர தேவ நாயனார் முதலிய பெரியோர்களை இங்கு நினைவு கூர்தல் நன்று.
நரி - நரிக்கூட்டம் அதனை, ``நாட்டின் புறத்தன`` என்றமையால், ஒரு கூட்டம் வேதத்திற்குப் புறம்பான. மற்றொரு கூட்டம் வேதத்திற்குள் இருப்பினும் சிவாகமத்திற்குப் புறம்பானது. `இவை எவை` என்பதை அறிந்துகொள்க. இந்த நரிக்கூட்டங்கட்கும், மேற்குறித்த மாம்பழத்திற்கும் என்ன தொடர்பு உண்டாகும். யாதும் தொடர்பு உண்டாகாது. அதனையே, ``நாட்டின் புறத்த நரிஅழைத் தென்செயும்`` என்றார். அழைத்தல் - கூப்பிடுதல்.
இனி, அகப்புறச் சமய நூல்களிலும், அகச்சமய உரைகளிலும் திருவைந்தெழுத்தின் சிறப்புக் குறிக்கப்பட்ட தாயினும், அவர் அதனைத் தெளியமாட்டாது புறக்கணித்துவிடுவர். அத்தனையே, ``காட்டிக் கொடுத்தவர் கைவிட்டவாறு`` என்றார். கொடுக்கப்பட்டவர் கொடுத்தவர் அந்நூல்களின் ஆசிரியர்களும், உரையில் ஆசிரியர்களும். `மாம்பழத்தைக் கனவிலும் கருதாது கூப்பிட்டுக் கொண்டிருக்கின்ற நரிக் கூட்டங்கள் போக, ஒரு சில மக்கட் கூட்டமும் அப்பழத்தைக் காட்டுவார் காட்டிக் கொடுக்கவும் எடுத்து உண்டு பயன்பெற்றில என்பதாம்.
மூட்டிக் கொடுத்த முதல்வன், தோட்டத்தை உண்டாக்கி வளர்த்த தலைவன். அவன் சிவன். தோட்டத்தையுடையான் கருணை காரணமாக, பசித்தவர்க்கு இதன் பழத்தைக் கொடுக்க` என்று தன் ஏவலாளர்க்குச் சொல்லியுள்ளான். அஃதே அவன் ஆணை. எனவே, `பிறவிப் பிணியால் துன்புறுவார்க்குத் திருவைந்தெழுத்தின் சிறப்பினை உணர்ந்தோர் உணர்த்துக` என்பதே சிவனது சங்கற்பம் என்பதும், அவ்வாற்றால் உணர்ந்தோர் உணர்த்தினும் மக்கள் அவரவர் பக்குவ பேதங்கட்கு ஏற்ப அதனைச் செவிமடாதோரும், செவிமடுப்பினும் பேணாதோரும், பேணினும் உட்கிடைப் பொருளை முற்ற உணர்ந்து முழுப் பயனைப் பெறாதோருமாய் உளர்` என்பதும் கூறியவாறு.
Special Remark:
`முதல்வன்`, என்பது ஆகுபெயராய் அவனது ஆணையைக் குறித்தது. `கொடுத்தவரும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. `கைவிட்டவாறு இரங்கத் தக்கது` என ஒரு சொல் வருவித்து முடிக்க.
இதனால் சமயிகள் பலரும் திருவைந்தெழுத்திகள் உண்மை அடியோடே அல்லது முற்றவோ உணராதவர்களாய்ப் பிறப்பின் பயனை இழத்தல் உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.