ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை

பதிகங்கள்

Photo

போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும்
கூகின்ற நாவலின் தருங்கனி
ஆகின்ற பைங்கூழ் அவையுண்ணும் ஐவரும்
வேகின்ற கூரை விருத்திபெற் றாரே.

English Meaning:
Sure Death, if Breath is not Controlled

The deceptive one that leaves,1
The false seed that enters2;
The Five3 who eat of the broth4 made
Of the ripe fruit5 of flourishing Jamun tree;
—All, all, went the burning roof`s way6

Tamil Meaning:
பறவைகள் தங்கிக் கூவுகின்ற நாவல் மரத்தி னின்றும் உணவாய் அமைகின்ற கனிகள் சில பயன்படாத இடத்தில் உதிர்வனவாயும், சில, மரத்திற்கு அடியில் உதிர்ந்தும் புதர் முதலிய வற்றால் பயன்படாதனவாயும் போய்விட, அந்த நாவல் மரத்தை உள்ளடக்கியுள்ள குடிலில் வாழ்கின்ற ஐவர், வேறிடத்தில் வளர்ந்த பயிர் தருகின்ற நெல்லை உண்டு வாழ்கின்றனர். அந்தக் குடிலோ சில நாட்களில் வெந்தொழிவதாய் உள்ளது.
Special Remark:
நாவல் மரம், சுவாச கோசம். அதினின்றும் உணவாகக் கிடைக்கும் கனி உடலை நிலைபெறுத்துகின்ற சுவாசம். போகின்ற கனி, வெளிச்செல்லும் காற்று. புகுகின்ற கனி, உள்ளே வரும் காற்று. புகுகின்ற காற்றை வெளிவிடாது தடுத்தால் பயன் விளைதல் பற்றி அதனை ``வித்து`` என்றார். `எனினும், அதனைத் தடுப்பார் இன்மையால் வெளிச்சென்றே வீணாகின்றது` என்றற்கு இரண்டையும் ``பொய்`` என்றே கூறினார். பறவைகள் சுவாச கோசத்தில் உள்ள நரம்பு முதலியன. `கூவுகின்ற` என்பது குறைந்து நின்றது. ஆகின்ற - வளர்கின்ற. பைங்கூழ் - பயிர், அது கருவியாகு பெயராய், அதன் விளைவைக் குறித்தது. பயிராவது, முற்பிறவியில் ஆக்கிய வினை. அதன் விளைவாவது, பிராரத்த விளைவு. அதனை உண்ணும் ஐவர், ஐம்பொறிகள். உண்பது உயிரேயாயினும் அது தன்னை `வேறு` என உணராது அவையாய் நின்று உண்ணுதலின் அவற்றையே உண்போராகக் கூறினார். உயிர் தன்னை, `அவற்றின் வேறு` என உணர்ந்து நீங்கியிருப்பின், பிராரத்த விளைவு உணவாகாது` என்பது கருத்து. விரைவு பற்றி, ``வேகின்ற`` என, எதிர்காலம் நிகழ்கால மாயிற்று. கூரை - குடில். வேவதாய குடிலாவது. தூல உடம்பு. `கூரையில்` என ஏழாவது விரிக்க. விருத்தி - பிழைப்பு.
``நாவலின்`` என்னும் `இன்`, நீக்கப் பொருளில் வந்த ஐந்தனுருபு. கூழ் - உணவு. கனியே உணவாயினும் உணவாம் தன்மையை நோக்கி அதனை வேறு போல வைத்து, ``கூழைத் தரும் கனி`` என்றார். சுவாசத்தை நாவற் கனியாகக் கூறியது, அக்கனி பெரும் பாலும் சாலையோரங்களில் நிற்கும் மரங்களினின்று சாலை நடுவில் உதிர்ந்து கிடப்பினும் வாழை, மா, பலா இவற்றின் கனிகளைப்போல மக்கள் ஆர்வமுடன் கொள்ளாமை பற்றி. `சுவாசமும் இயற்கையாய் அமைந்து, அருமையறியப்படாததாய் உள்ளது` என்பதாம். இரண்டாம் அடியை முதலிற் கூட்டி, முதல் அடியின் ஈற்றில் `ஆக` என்பது வருவிக்க.
``பைங்கூழ்`` எனப்பட்ட பிராரத்த விளைவையே, ``போகின்ற பொய்`` என்பதற்கும் பொருளாக வைத்து, ``புகுகின்ற வித்தாவது ஆகாமியம்`` என்றவர், அதற்கு இயைபு காட்டிற்றிலர்.
இதனால், `சுவாசத்தை யோக நெறியில் பயன்படுத்திக் கொள்ளாதவர், பிராரத்தை அனுபவித்து மறைகின்றவரே யாவர்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.