ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை

பதிகங்கள்

Photo

ஆமாக்கள் ஐந்தும் அரிஒன்றும் முப்பதும்
தேமா இரண்டொடு தீப்புலி ஒன்பதும்
தாமாக் குரம்கொளின் தம்மனத் துள்ளன
மூவாக் கடாவிடின் மூட்டுகின் றாரே.

English Meaning:
How to be Youthful

The five wild bulls1 of Jiva,
And the fierce lions thirty2,
The two mangoes sweet3,
The fradulent nine4
And the mind within,
If yours they become, firm controlled,
The bull,5 old becomes not;
If not, they put fire to it6
Tamil Meaning:
ஒரு காட்டிலே ஐந்து காட்டுப் பசுக்கள். முப்பத் தொரு சிங்கங்கள், தெய்வத் தன்மை வாய்ந்த இரண்டு குதிரைகள், ஒன்பது கொடிய புலிகள், காட்டெருமைக் கடாக்கள் வாழ்கின்றன. அங்குச் செல்வோர் அவைகளில் இரண்டு குதிரைகளை மட்டும் தம் வசப்படுத்தி, அவற்றின்மேல் தக்கபடி ஏறிச் செல்வாராயின், மேற் கூறிய கொடுவிலங்குகள் யாவும் அவர் விருப்பப்படி அடங்கி நடக்கும். மாறாக, குதிரைமேல் ஏறாது, கட்டுடல் வாய்ந்த அந்தக் கடாக்களின் மேல் ஏறுவாராயின், மேற்சொல்லிய கொடுவிலங்கு களையும் வெறியேற்றித் தாமே தமக்குத் துன்பத்தை வருவித்துக் கொள்பவராவார்.
Special Remark:
ஆமா - காட்டுப் பசு. அவை ஐந்தாவன சிவ தத்துவங்கள். `காட்டுப் பசு, மக்களுக்கு இதம் செய்வது போல, நாவால் நக்கி நக்கியே கொன்றுவிடும்` என்பர். சிவ தத்துவங்கள் வித்தியா தத்துவங்களைச் செலுத்தி, உலக இன்பத்தில் அழுத்திப் பிறப்பை உண்டாக்குதல் பற்றி அவைகள் காட்டுப் பசுக்களாகச் சொல்லப்பட்டன. பக்குவம் வாயாத ஆன்மாக்களுக்கு இறைவனது சத்தி திரோதான சத்தியாய்ப் பிறவித் துன்பத்தை பயத்தலால், அந்தச் சத்தியின் வேறுபாட்டால் உண்டாகிய சிவ தத்துவங்களே அவ்வாறு உருவகித்தார். ஆன்மாப் பக்குவம் எய்தியவுடன் திரோதான சத்தி அருட் சத்தியாக மாறினால் சிவதத்துவங்கள் மட்டுமல்ல; எல்லாத் தத்துவங்களுமே நல்லனவாக மாறிவிடும். அதுவரையில் அவை யாவும் பிறவித் துன்பத்தையே தரும். அரி - சிங்கம். முப்பத்தொரு சிங்கங்களாவன. சிவ தத்துவம் ஐந்து தவிர, மற்றைய தத்துவங்கள். புலியை நோக்கச் சிங்கங்கள் அத்துணைக் கொடியன அல்ல. ஏனெனில் `சிங்கம் பசித்து, உணவை நாடும்பொழுது தான் பிற விலங்குகளைக் கொல்லும்` என்றும், `மற்றை வேளைகளில் எதனையும் கொல்லாது` என்றும் கூறுவர். அம்முறையில் வீடுபேற்றினை நோக்கத் தத்துவங்கள் தடையாயினும், உலகியலை நோக்க, வை உறுதுணைகளேயாம். அது பற்றி அவற்றை `அரிகள்` என்றார். தே - தெய்வத்தன்மை. மா - குதிரை. இப்பல பொருள் ஒருசொல், விலங்குகளின் இடை வைத்து எண்ணப்பட்டதனால், குறித்த பொருளை உணர்த்திற்று. இரண்டு குதிரைகளாவன இடநாடி, வலநாடி மூச்சுக்கள். ஒன்பது புலிகளாவன தூல உடம்பில் உள்ள நவத் துவாரங்கள். இவை எஞ்ஞான்றும் தம் செயலைச் செய்யத் தவறுவதில்லை. அதனால் அடக்கப் படாமை பற்றி அவைகளை, ``தீப் புலி`` என்றார்.
``எண்ணென்றா, உறழ் என்றா ஆயிரண்டும் இனன் ஒன்றல் வேண்டும்`` என்ப.3 ஆகலின், `ஆமாக்கள், தாமாக்கள், கடாக்கள்` என்பவற்றோடு, திப்பிலியை உடன்வைத்துக் கூறுதல் பொருந்தா மையின், `திப்பிலி` எனப்பாடம் ஓதுதலும் ``தேமா`` என்பதற்கு `மா மரம்` எனப் பொருள் உரைத்தலும் பொருந்தாமையறிக. ``அறியேறு முப்பதும்`` எனப்பாடம் ஓதி, `முப்பது, என்பதற்கு, `மூன்றும், பத்தும்` எனப் பொருளுரைத்து, சிலவற்றை இடர்ப்பட்டுக் கொணர்ந்து, `பதின் மூன்று` எனக் காட்டுதலும் வேண்டாதனவேயாதல் அறிந்துகொள்க.
தாமா - தாவுகின்ற குதிரை. ``தாவுகின்ற`` அடையானே, `மா` என்பது பாய்மா ஆயிற்று. குரம் - குதிரையின் குளம்பு. இதனை ஊன்றி நடத்தல் பற்றியே குதிரையை வடமொழியாளர் `குரகதம்` என்றனர். ``குரங்கொளின்`` என்பது, ``நடக்குமாயின்`` என்பதைக் குறிக்கும் குறிப்பு மொழியாய்ப் பின்னும் ஏறிச் செலுத்துதலைக் குறித்தது. ``தம்மனத்து உள்ளன்`` என்பதற்கு, `தங்கள் மனத்தின்படி உள்ளன வாம்` என்க. ஆமா முதலியவற்றைக் கூறினமையால் `காடு` என்பது போந்தமையின், குதிரையை ஏறுவாரும், ``தம்மனம்`` என்பது அவர்மனமும் ஆதல் விளங்கிற்று. மூவாமை, தன் எதிர் மறையாகிய இளமையைக் குறித்தது. `முட்டுகின்றாரே ஆவர்` என ஒரு சொல் வருவித்து முடிக்க. குதிரையை ஏறிச் செலுத்துதலாவது, வாசியோகம் செய்தலாம். யோகம் வல்லார்க்கு மூச்சுக் காற்று அவர் வழிப்படுதலின், அந்நிலையில் அதனைக் குதிரையாகவும், ஏனையோர்க்கு அதுதான் சென்ற வழியே செல்லுதலின் அந்நிலையில் அதனைக் கடாகவும் உருவகித்தார். ஒரு பொருளே நிலை வேறுபாடு பற்றிப் பல பொருளோடு உவமிக்கப் படுதலை, ``நட்டார்க்கு அமிழ்தொத்து, நள்ளார்க்கு நஞ்சொக்கும் இவன்`` என்னும் வழக்கத்தாலும்,
``கார்; அணி கற்பகம்; கற்றவர் நற்றுணை;
பாணர் ஒக்கல்;
சீரணி சிந்தா மணி; அணி தில்லைச்சிற்
றம்பலவன்
தாரணி கொன்றையன்; தக்கோர்தம் சங்கநிதி;
விதி; சேர்
ஊருணி உற்றவர்க்கு; ஊரன், மற்றியாவர்க்கும்
ஊதியமே``l
என்னும் செய்யுளாலும் அறியலாம்.
இதனால், யோகம் பயில்வார்க்கு அவரது கருவி கரணங்கள் அவர் வழிப்பட்டனவாய் வீடு பயத்தலும், அது பயிலாதார்க்கு அவை தம்மியல்பிற் சென்று அதனைப் பயவாமையும் உள்ளுறையாகக் கூறப் பட்டன. முன் தந்திரத்தில் ஐம்பொறிகளை மட்டும் கூறினார்; இம் மந்திரத்தில் அனைத்துக் கருவிகளையும் கூறினார். ஈற்றடி உயிரெதுகை.