ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை

பதிகங்கள்

Photo

காயம் பலகை கவறைந்து கண்மூன்று
ஆயம் பொருவ(து)ஓர் ஐம்பத்தோ ரக்கரம்
ஏய பெருமான் இருந்து பொருகின்ற
மாயக் கவற்றின் மறைப்பறி யேனே.

English Meaning:
Mystery of Lord`s Play

Body the gambling board;
Five1 the dice;
Three2 the channels
Fifty-one3 the squares
Thus the Jivas play the game;
He who thus leads them to it,
The mystery of His play
I know not.
Tamil Meaning:
சிவன் கொடுத்த பொருளை அஃது அன்னதாதலை அறியாது தம்முடையனவாகக் கருதிச் சிவனுக்கும், சிவனடியார் களுக்கும் கொடுக்க மறுத்தவர்களது பொருளை மூர்க்க நாயனார் சூதாடிப் பறித்ததுபோல தம்மையுணருமுகத்தால் தமையுடைய தன்னை உணரற்பால வாகிய உயிர்கள் அதனைச் செய்யாது, தம் கருவி கரணங்களைத் தாம் விரும்பும் வகையிற் செலுத்தி அல்ல லுறுதலை அறிந்த சிவபெருமான் அவைகள் அறியாமல் அவை களோடு கூடியிருந்தே அக்கருவி கரணங்களின் வழித் தன் வழியில் அவைகளைத் திருப்புதலாகிய சூதாட்டத்தினைச் செய்வதாகக் குறிப்பிட்டு, ஆயினும், சூதாடுவோர் பிறர் தமக்கு எதிர் இருந்து தம் பொருளைக் கவர முயலுதலை நன்கு அறிதல் போல உயிர்கள் சிவனை அறிந்து கொள்ளவில்லை` எனக் கூறுகின்றார்.
நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்துச் சம்பாதித்த பொருளாயினும் அப்பொருளை கட்குடிக்கும், கவறொடுதலுக்கும் ஒருவன் பயன்படுத்துவானாயின் அஃது அவனுக்குப் பாவமேயாதல் போல, மூர்க்க நாயனார் சூதாடிப் பொருள் ஈட்டினாராயினும் அதனை அவர் சிவனுக்கும், சிவன் அடியார்களுக்குமின்றி, வேறுவகையில் செலவிடாமையால், அஃது அவர்க்குச் சிவ புண்ணியமேயாயிற்று. வாதவூரடிகள் பாண்டியன் பணத்தைச் செலவிட்டது இத்தகையதோ. சிவன் மறைந்து நின்று செய்யும் செயலும் இப்படிப்பட்டதே.
உயிர்களை நன்னெறியில் செல்ல ஏவிய சிவபெருமான், அதன் பொருட்டு அவைகட்கு வேண்டும் துணைப்பொருள்களை நிரம்பக் கொடுத்திருந்தபோதிலும் அவைகள் அவற்றை மாற்று வழியிற் செலுத்துதலால், அச்செயலை அவன் மறைந்து நின்று மாற்று கின்றான். அஃது ஒரு சூதாடியின் செயல் போன்றுள்ளது. ஆகவே சிவபெருமா -னாகிய சூதாடிக்கு உயிர்கட்கு அவனால் தரப்பட்ட உடம்புகளே சூதாடும் பலகைகள். சாக்கிரம் முதலிய மூன்றவத்தை இடமாகிய புருவ நடு, கண்டம், இருதயம் ஆகியவையே சூதாடு களம். உடம்பின் புறத்தும், அகத்தும் உள்ள கருவிகளே உருட்டியோ, குலுக்கியோ பந்தயம் பெறும் கருவிகள். எழுத்தும், சொல்லும், சொற்றொடருமாய் உணர்வைத் தரும் மொழிகளே. அக்கருவிகளின் வழிப்பெற்ற பந்தயத்தின் படி காய்களை இடம் பெயர்த்து வைத்து, வெற்றி தோல்வியைத் துணிகின்ற வரைகோடுகள் அல்லது கட்டங்கள், இவை -களில் பலகை, களம், உருள் கட்டம் ஆகியவற்றை எல்லாவற்றையும் அறிகின்ற உயிர்கள் அவற்றின் வழித் தம்மை வஞ்சிக்கின்ற சிவன் ஒருவனை அவன் தம்முடன் கூடவேயிருந்தும் அறியவில்லை.
Special Remark:
`இஃதொரு பெருவியப்பு` என்பது குறிப்பெச்சம். ``ஐந்து`` என்றது உபலக்கணம் ஆதலின் தொண்ணூற்றாறையும் கொள்க. கண் - இடம்; களம். ஆயம் - தாயம். அது பத்து, பன்னிரண்டு முதலாகக் கொள்ளப்படும். `ஆயத்தால்` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. பொருவது - பொருது, வெற்றி தோல்வி அறியும் கூட்டம்; வரைகோடுகள். அக்கரத்தையே கூறினாராயினும் அவற்றால் ஆகும் `பதம், வாக்கியம்` என்பனவும் கொள்ளப்படும். ஏயஏவிய `உடன் இருந்து` என்க. `உலகர் ஆடும் சூதுபோல்வதன்று; வியப்பைத் தரும் சூது` என்றற்கு ``மாயக்கவறு`` என்றார் தோன்றாது மறைந்து நிற்றல் பற்றிச் சிவனைக் ``கள்ளர்`` எனக் கூறிற்றுத் திருவுந்தியார்.8 குமர குருபர அடிகளும் ``வஞ்சித்த எங்கும் உளன் ஒருவன்`` என்றார். 9 மறைப்பு - மறைத்தல் தொழில். அறிதல், அதன் இயல்பினை முற்ற உணர்தல்.
இதனால், சிவன் தனது மறைத்தற் சத்தியை (திரோதான சத்தியை)க் கொண்டு உயிர்களின் ஆணவ மலத்தை அவையறியாமல் நின்று பக்குவப்படுத்தி வருதல் உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.