ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை

பதிகங்கள்

Photo

தோணிஒன் றேறித் தொடர்ந்து கடல்புக்கு
வாணிபம் செய்து வழங்கி வளர்மகன்
நீலிக் கிறைக்குமேல் நெஞ்சின் நிலைதளர்ந்(து)
ஆலிப் பழம்போல் அளிகின்ற அப்பே.

English Meaning:
Jiva`s Journey in Yoga Sea

He boarded a boat and launched into sea,
He traded well and flourished fast;
The good man,
To a She-devil gave his heart,
And in spirit lost dropped
To him as a rich fruit of nectar sweet
Is that Divine Water that flows.
Tamil Meaning:
கடலில் தோணி ஒன்றில் ஏறிப் புகுந்து சென்றும், மீண்டும் தொடர்ந்து வாணிபத்தைச் செய்தும் ஆக்கம் பெற்று வருகின்ற ஒருவன் தனது ஆக்கத்தை மனைவியர்க்குக் கொடுத்து வாழ்க்கை நடத்தச் சொல்லாமல் பரத்தைக்கு வழங்குவானாயின், நாளடைவில் அவன் கவலை மீதூர, ஆலங்கட்டி பழம்போலத் தோன்றிச் சாற்றைத் தாராமல் நீரையே தருதல் போலும் நிலையை அடைவான்.
Special Remark:
``உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்``3 என்பது போல அவன் வாழ்க்கை கெடும் என்றபடி.
தோணி, மனம். ``மனம் எனும் தோணி பற்றி``l என அப்பரும் அருளிச்செய்தார். அந்தக் கரணம் அனைத்தும், `மனம்` எனத்தொகுத்து வழங்கப்படும். அந்தக் கரணமே சூக்கும தேகம். அது முத்தியடையுங்காறும் நீங்காதிருக்கும். `உயிர்கள் செய்த புண்ணிய பாவங்கள் புத்தி தத்துவத்தைப் பற்றிக் கிடந்து பயன் தரும்` என்பது சைவ சித்தாந்தம் அதனால், அதனைப் பிறவியாகிய கடலில் பயணம் செய்தற்குரிய தோணியாக உருவகித்தார். வழங்குதல் - பயணம் செய்தல்.
உயிர் உடம்பை பற்றி நின்று பிற உயிர்களிடத்து நல்லன தீயனவற்றைச் செய்தல், வாணிபத்தில் விலை கொடுப்பதனோடும், அதனால் செய்த உயிர் தான் அடைகின்ற அறம் பாவங்கள் பண்டத்தைக் கொள்வதனோடும் ஒக்கும். ஆதலின் இச்செயலை ``வாணிபம்`` என்றும், `அதனை உயிர் தொடர்ந்து நடத்துகின்றது` என்றும் கூறினார்.
அற உணர்வும் இறையுணர்வும் மனைவியர். கொண்ட பண்டங்களாகிய அறம் பாவங்களை இவ்விருவகை உணர்வுகளும் முதிர்வதற்குப் பயன்படுத்தினால் நலன் விளையும். அது பற்றி இவ்வுணர்வுகளை மனைவியராகக் கூறினார்.
பொய்க் கண்ணீர் வடிக்கின்றவளை `நீலி` என்றல் வழக்கு. அது பற்றிப் பொய்யாக பரிவு காட்டும் பரத்தையை, ``நீலி`` என்றார்.
பரத்தை, பல பொருள்கள் மேலும் செல்லும் ஆசை. ஒருவன் தனது அறிவால் மேலும் மேலும் ஆசையை வளர்த்தால் அவன் கெடுவானன்றோ! அது பற்றி, ``நெஞ்சின் நிலைதளர்ந்து ... ... அன்பே`` என்றார். அளிதல், மெலிந்து கரைதல். `அப்பே ஆம்` என முடிக்க. இம்மந்திரம் ஈரடி எதுகை பெற்றது.
இதனால், `அறிவால் அற உணர்வையும், இறையுணர்வையும் பெருக்கிக் கொள்ளாமல், ஆசையை வளர்ப்பார் கெடுவர்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.