ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை

பதிகங்கள்

Photo

கோமுற் றமரும் குடிகளும் தம்முளே
காமுற்ற கத்தி யிடுவர் கடைதொறும்
வீவற்ற எல்லை விடாது வழிகாட்டி
யாமுற்ற தட்டினால் ஐந்துண்ண லாமே.

English Meaning:
Properly Guided, Jiva Reaches the Final State

The tribes of Indriyasto Jiva belong
Each at his gate with swords fight;
If constantly guided,
Jiva takes the True Way to Frontier;
Form that bourne none ever returns;
Form that very plane shall he transcend;
The Five-States-Beyond.
Tamil Meaning:
செங்கோல் அரசன் உண்மையாகவே மிகவும் அன்பு செலுத்தினாலும் அவனது தன்மையை அறியாத குடிகள் வெளிப்படையாக இன்றி, மறைவாகத் தங்களுக்குள்ளே வாய்ப்பு நேரும்பொழுதெல்லாம் அவ்வரசனைப் பற்றிப் பல தூற்றுதல் மொழிகளைக் கூறிக்கொள்வார். ஆயினும் கால வரையறையின்றிக் குடிகளுக்கு அவை வாழ வழிவகுத்து வரும் அரசன் தன் கடமையி னின்று தவறுவானேயானால், நாம் உணவு முதலியவற்றைப் பெற்று வாழ இயலுமோ! (இயலாது.)
Special Remark:
அமர்தல் - விரும்புதல். உம்மை, சிறப்பு. குடிகளை உண்மையாகவே மிகவும் விரும்பும் செங்கோல் அரசன், ஆன்மாக் களின்மேல் உண்மையான அறக்கருணையை உடைய சிவன். அவன் அத்தகைய கருணையாளனாய் உயிர்கட்கு, `பெத்தம், முத்தி` இரு நிலைகளிலும் உபகரித்துவரினும், அறிவற்ற உயிர்கள், `சிவன் இல்லை` என்றும், `இருப்பினும் அவனுக்குக் கண் இல்லை` என்றும் இன்னோரன்னவாகத் தம் வாய்க்கு வந்ததைத் தங்களுக்குள் கூறிக் கொள்வர். அதனையே, ``கடைதொறும், காமுற்ற கத்தியிடுவர்`` என்றார். கடை - இடம்; வாய்ப்பு. காமுற்ற - விரும்பிய சொற்கள். வீதல் - முடிதல் எல்லை, கால எல்லை. அரசன் ஒருவனேயன்றிப் பலர் வரினும் அரசு நீடு செல்வதேயாகலின் அதனைச் சிவன் செயலுக்கு உவமையாகக் கூறினார். ``வழிகாட்டி`` என்பது பெயர். `யாம் உற்றவற்றைத் தட்டினால்` என்க. தட்டுதல் - தவறுதல். ஐந்து, ஐம்புல நுகர்ச்சி.
அரசு கால வரையறையின்றிக் குடிகளை ஓம்பன், சிவன் பெத்தம், முத்தி இரண்டிலும் உயிர்கட்கு உபகரித்தலைக் குறித்தது. பலவற்றைச் சொல்லுமிடத்துப் படர்க்கையில் வைத்துக் கூறிய பொருள் நமக்கும் பொருந்தவதாயின், அதனைப் பின்பு ஓரிடத்தில் நம்மேல் வைத்துக் கூறுதலும் பொருந்துவதே. அதனை, `நீர் இன்றி யமையாது உலகம் என்றால், மழையின்றி நாம் எங்ஙனம் அமைவேம்` என்பதுபோலக் கூறிக் காண்க. இம்முறையில், ``தம்மிலே கத்தி யிடுவர்`` எனக் கூறிப் பின்பு, ``உற்ற தட்டினால் யாம் உண்ணலாமே`` என்றார். ஏகாரம் எதிர்மறை குறித்த வினா, `ஐம்புல நுகர்ச்சி` என்பது வெளிப்படைப் பொருளில் உடல் ஓம்புதலையும். உள்ளுறைப் பொருளில் வினை நுகர்ச்சியையும் குறித்து நின்றது. இதனுள், மூன்றாம் அடி மூன்றாம் எழுத்தெதுகை பெற்றது.
`பெத்த நிலையிலும் சிவன் உடனாய் நின்று உபகரியாகிவிடின், உயிர்கள் வினையை ஈட்டுதல் நுகர்தல்களைச் செய்தல் இயலாது` என்றபடி.