ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை

பதிகங்கள்

Photo

உழவொன்று வித்து ஒருங்கிய காலத்(து)
எழுமழை பெய்யா(து) இருநிலம் செவ்வி
தழுவி வினைசென்று தான்பய வாது
வழுவாது போவன் வளர்சடை யானே.

English Meaning:
No More Karmas if Yoga is Attained

When after Ploughing, Seed is cast,
And copious Rains fall,
And it soaks the Land,
No more will Karmas germinate;
Sure He comes,
The Lord of flourishing matted locks.
Tamil Meaning:
வெள்ளிதாய் எழுந்த மேகம் மழை பெய்தல் இல்லை. அப்பொழுது உழவுக்கு வேண்டுவதாகிய விதைகள் சேமித்து வைக்கப்பட்ட இடத்திலே கிடக்க, நிலமும் பதப்படாது, உழவுத் தொழிலும் நிகழ்ந்து பயன் தாராது.
(இதனானே, `கரிதாய் எழுந்த மேகம் மழைபொழிந்த காலத்து, மேற்கூறியன மேற்கூறியவற்றிற்கு மறுதலையாய் நிகழும்` என்பதும் பெறப்படும்.) ஆகவே, மழையைப் பெய்விப்போனாகிய சிவன் பெய்வியாது ஒழிதல் இல்லை.
Special Remark:
``மழை`` (மேகம்) என்றது, சிவனது அருளை. அதனைப் போககாமிகளை நோக்கி, மறக் கருணையாகிய திரோதான சத்தியாகவும், மோட்ச காமிகளை நோக்கி, அறக் கருணையாகிய அருட் சத்தியாகவும் கொள்க.
இனி, `உழவு, வித்து` என்பனவும் போகத்திற்கு ஆகாமியம் ஏறுதலும், சஞ்சிதம் கிடத்தலுமாகவும், மோட்சத்திற்குத் தவம் மிகுதலும், ஞானம் முதிர்தலுமாகவும் கொள்க. நிலம், இரண்டிற்கும் ஆன்ம உணர்வேயாம்.
``எழு மழை பெய்யாது`` என்பதனை முதலிற்கூட்டிப் பொருள் கொள்க. பெய்யாது - பெய்யாமையால், வினை. உழவுத் தொழில். மழையின் இன்றியமையாமையையே உடன்பாட்டு முகத்தாலும், எதிர்மறை முகத்தாலும் வலியுறுத்தினார்.
இதனால் `போகமாயினும், மோட்சமாயினும் சிவனருள் இன்றி ஆகாது; அவன் அன்றி ஓரணுவும் அசையாது` என்பது உள்ளுறை வகையால் வலியுறுத்தப்பட்டது.
``கண்ணுதல் யோகிருப்பக்
காமன் நின்றிட வேட்கைக்கு
விண்ணுறு தேவ ராதி
மெலிந்தமை ஓரார்; மால்தான்
எண்ணிவேள் மதனை ஏவ,
எரிவிழித் திமவான் பெற்ற
பெண்ணினைப் புணர்ந்து யிர்க்குப்
பேரின்பம் அளித்த தோரார்``
என்பது சிவஞான சித்தி.* இதனை ஒட்டி,
``எல்லா உயிர்க்கும் உயிர் அருணேசர்;
இவர் அசைவி
னல்லாது அணுவும் அசையாது என்பது
அறிந்தனமே;
வில்லாடன் மாரன் இருக்கவும் யோகம்
விளைத்த அந்நாள்
புல்லா திருந்தன எல்லா உயிருந்தம்
போகத்தையே``*
எனப் பிற்காலத்தவரும் கூறினார். இதன் ஈற்றடி, முதல் மூன்று அடிகளின் சார்பு பொருளாக வந்தது.