ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை

பதிகங்கள்

Photo

கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும்
நாகையும் பூழும் நடுவில் உறைவன
நாகையைக் கூகை நணுக லுறுதலும்
கூகையைக் கண்டெலி கூப்பிடு மாறே.

English Meaning:
The Six Evils Dwell Within and God`s Warning to Them

The Owl, The Snake, the Parrot and the Cat,
The Mynah, and the Quail
They, all, within dwell;
As the Owl nears the Mynah
The Mouse warns Mynah, screeching loud.
Tamil Meaning:
கருடனைப் போலக் கூகையும் பாம்பைக் கண்டவுடன் கொல்லும். அதனால் கூகையும், பாம்பும் தம்முட் பகையாவன. கிளியும் பூனையும் தம்முட் பகையினவாதல் தெளிவு. நாகை - நாகணவாய்ப் புள். இதுவும் கிளியைப்போலப் பேசும் தன்மையுடையது; குறும்பூழ் (காடை) அத்தன்மையைப் பெறாமையால் அவையும் ஒன்றுவன அல்ல. இவை அனைத்தும் வாழ்கின்ற ஒரு காட்டில் எலிகளும் வாழ்கின்றன. ``கிள்ளை பாடுவ; கேட்பன பூவைகள்``3 என்றதனால், `பேசும் தன்மையோடு, கேட்கும் தன்மையுடையது நாகணவாய்ப்புள்` என்பது விளங்கும்.
Special Remark:
கூகை, மற்றைப் பறவைகள் போல வெளியே விருப்பப்படி பறந்து காணப்படாது. இருக்கும் இடம் தெரியாமல் ஒளிந்து கிடக்கும். பாம்பு மிகக் கொடியது. கிளி யாவராலும் மிக விரும்பப்படுவது. பூனை வெளிக்கு நல்லதுபோல இருந்து பாயும் நாகணவாய்ப்புள், கிளியோடு ஓரளவு சமமாக மதிக்கப்படுவது. குறும்பூழ், ஒன்றிலும் சேராதது. `சிறு துரும்பும் பல்லுக்குதவும்` என்பதுபோல, ஓரோர் காலத்தில் சகுனத்தை அது தரும். இவற்றின் நடுவில் உறைவன எலிகள். `இவற்றின்` என்பது எஞ்சி நின்றது.
இவைகளைப் போல, உலகத்தில் பல திறப்பட்ட மக்கள் வாழும் நிலையில், அவர்களுக்குள்ளேயும் ஒற்றுமையின்றி இகலி வாழ்கின்றார்கள். இங்குக் குறஇக்கப்படும் இகல், சமயப் பூசல்.
எலி, ஓர் எளிய பிராணி. மக்களுக்கு அதுவும் பகைதான். ஆயினும் இங்கு மக்களை நாம் கருத வேண்டியதில்லை. மேற்கூறிய, அனைத்தும் சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ எலிக்குப் பகையாவனதாம். அது போல, எத்திற மக்களும் ஏழைக்கு உதவுபவர் அல்லர். மாறாக, நலிவும் செய்வர்.
தத்துவத் துறையில் ஏழையராவார். சற்குரு கிடைக்கப் பெறாதவர். அவர்கள், `நமக்கு யார் வழிகாட்டுவார்கள்` என்று அலமந்திருக்கும் பொழுது, கூகை போல வெளியுலகத்தில் தொடர்பு கொள்ளாத சிலர் சில அறிவுரைகளை வேண்டி, நாகணவாய்ப் புள் போன்றவர்களிடம் அறிவுரை கேட்கச் செல்லும்பொழுது, செல்பவரது நிலை தெரியாமல் அவரைக் குருவைத் தேடுபவர் குருவாக அடைந்தால் என்ன ஆகும்?
``குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே``*
என இவரே முன்பு அருளிச் செய்தபடி, இருவரவுங் கெடுவது தவிர, வேறு எதுவும் விளையாது. இதனையே இங்கு,
``நாகையைக் கூகை நணுக லுறுதலும்
கையைக் கண்டு எலி கூப்பிடுமாறு``
என்றார். கூப்பிடுதல் - தன்பால் வரவழைத்தல். ஆறு - நெறிமுறை. `ஆறு உள்ளது` என ஒரு சொல் வருவித்து முடிக்க. பிற்பகுதிப் பொருள் இனிது விளங்குதற் பொருட்டு, முற்பகுதியில் பல பொருள்களைக் கூறினார்.
இதனுள் உய்த்துணர வைத்த காடாவது உலகம்.
இதனால், சற்குருவைச் சாராது அசற்குருவைச் சார்தலின் குற்றம் உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.