ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை

பதிகங்கள்

Photo

கும்ப மலைமேல் எழுந்ததோர் கொம்புண்டு
கொம்புக்கும் அப்பால் அடிப்பதோர் காற்றுண்டு
வம்பாய் மலர்ந்ததோர் பூஉண்(டு)அப் பூவுக்குள்
வண்டாக் கிடந்து மணங்கொள்வன் ஈசனே.

English Meaning:
Siva Draws Jiva Like Himself

On the Peaked Mountain is a Summit High,
Beyond the Summit blows a Gusty Wind;
There blossomed a Flower that its fragrance spread
Within that Flower, a Bee its Nectar imbibed,
There the Lord like Himself Jiva draws.
Tamil Meaning:
கும்பம் - குடம். இதனைக் கவிழ்த்து வைத்த குடமாகக் கொள்க. கவிழ்த்து வைத்த குடம் கீழே குறுகியும், மேலே விரிந்தும் இருக்கும். அதுபோலப் பிருதிவியிலிருந்து பிரகிருதி முடியப் போகப் போக விரிந்துள்ளன ஆன்ம தத்துவங்கள். ஆகவே அவற்றின் தொகுதியை, ``கும்பமலை`` என்றார். கும்பமலை - கும்பம் போன்ற மலை.
Special Remark:
``கொம்பு`` என்றது தறி. மலையின் உச்சியில் தறி ஒன்று மலையுள்ளே அடிவரையில் ஊடுருவ அடிக்கப்பட்டு, மேலேயும் உயர்ந்து நிற்பதாகக் கொள்ளவேண்டும். ஏனெனில், இவையெல்லாம் அதிசயப்பொருள்களாகவே கூறப்படுதலின், இத்தறி, இத்தறி ஆன்ம தத்துவத்தை வியாபித்து, அவற்றிற்கு மேலேயுள்ள, அராகம் முதல், மாயை முடிய உள்ள வித்தியா தத்துவங்களின், தொகுதி. இவை ஆன்ம தத்துவங்களை நிலைபெறுத்தித் தாமும் நிலைபெற்றிருத்தலால் இவ்வாறு கூறப்பட்டன.
கொம்புக்கும் அப்பால் அடிப்பதோர் காற்று சுத்த தத்துவங்கள். அவை சூக்குமமாயும், காற்றுப்போல வீசிப்பிற தத்துவங்களைத் தூய்மை செய்து, முற்றிலும் வியாபித்திருத்தலாலும் இவ்வாறு உருவகிக்கப்பட்டது.
வம்பு - புதுமை. புதுமையாய் மலர்ந்ததோர் பூ, தத்துவ ஆராய்ச்சியால் தத்துவ ரூபம், தத்துவ தரிசனம். தத்துவ சுத்தி இவைகளைச் செய்து இவற்றின் நீங்கி, அவற்றின் மேலாய் விளங்குகின்ற சுத்தான்மா.
இது வரையில் உருவக முறையால் தாம் கருதிய பொருளை உள்ளுறைப் பொருளாக உணர்த்திய நாயனார், `ஆன்மாக்களின் இரு தய கமலத்தில் விளங்குபவன் சிவன்` என்னும் முறைமை பற்றி, அவன் தயிரில் நெய்போல இனிது விளங்குவது சுத்தான்ம சைதன்னியத்தில் தான்` என்பதை, `சிவன் இந்தப் புதுமலரில்தான் வண்டாக் கிடந்து மணங்கொள்வன்`` எனச் சிறிது வெளிப்படை யாகவே கூறிவிட்டார்.
`மலர் ஆன்மா` எனவே, மணம், அதன் போதம் ஆயிற்று. ஆகவே, `இந்தப் புதுமலரில் ஈசன் வண்டாய்க் கிடந்து மணங் கொள்ளுதல்` என்பது, சீவபோதத்தைத்தான் உண்டு, சிவபோதம் வாயிலாகச் சிவானந்தத்தை வழங்குதல் ஆயிற்று. இதன் ஈற்றடி இன எதுகை பெற்றது.
இதனால், `தத்துவங்களின் நீங்கித் தூய்தாய் நின்ற சுத்தான்ம சைதன்னியத்தில் தான் சிவன் விளங்கி நிற்பான்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.