ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்

பதிகங்கள்

Photo

தானவர் சிட்டர் சதுரர் இருவர்
ஆனஇம் மூவரோ டாற்ற அராதிகள்
ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமும்
சேனையும் செய்சிவ சக்கரந் தானே.

English Meaning:
Siva Chakra

Place them all in squares appropriate
The Dhanavar, the Chattar, the Sathirar two,
The two Guard-gods, and the rest of them fifteen,
Bindu, and Nada and Siva Gana Natha,
Thus form Siva Chakra.

Tamil Meaning:
தானம் - இடம். தானவர் -இடங்காவலர்; (கே்ஷத் திர பாலகர்) பைரவர். சட்டர் - செப்பம் செய்பவர்; குற்றம் செய் தோரை ஒறுத்துத் திருத்துபவர்; வீரபத்திரர். சதுரர் இருவர் - திற முடைய மகார் இருவர்; பிள்ளையாரும், முருகரும். ஆன இம் மூவர் - இவ்வாறு மூன்று வகையாகச் சொல்ல நின்றவர். ஆற்ற அராதிகள் - நெறியில் உள்ள உருத்திரர் முதலியோர்; உருத்திரர் முதலாகக் கீழ் நோக்கி எண்ண வருகின்ற மாலும், அயனும், உருத்திரர் முதலாக மேல் நோக்கி எண்ணவருகின்ற மகேசுரர், சதாசிவரும் ஆக ஐவர். ஏனைப் பதினைந்தும் - மேற்சொல்லிய ஒன்பதின்மரது எழுத்துக்களையும் பொறித்தபின் எஞ்சி நிற்கின்ற பதினைந்து அறைகளிலும், விந்து, நாதம், சூழ்படை (பரிவாரங்கள்) என்ப வற்றது எழுத்துக்களைப் பொறிக்கச் சிவசக்கரம் அமையும்.
Special Remark:
இச்சக்கரத்தின் வடிவம் ஆமாறு:
`கள்` விகுதி உயர்திணைப் பன்மையையும் உணர்த்தி நிற்றல் பிற்கால வழக்காதல் வெளிப்படை. ``ஏனைப் பதினைந்து`` என்ற தனால்,, `முன்னர்க் கூறப்பட்டன ஒன்பது` என்பது பெறப்பட்டது. பதினைந்தில் விந்து நாதங்களைப் பிரித்தமையால். சேனை பதின் மூன்றாயிற்று. ``சேனை`` எனப்பட்ட பதின்மூவராவார் திசை காவலர் எண்மரும், `நந்தி, மாகாளர், பிருங்கி, இடபர், சண்டர்` என்னும் ஐவரும் ஆவர். ஈற்றில், `அமையும்` என்னும் பயனிலை எஞ்சி நின்றது.
விளிம்பு அறை இருபத்து நான்கிலும் உள்ள எழுத்துக்களின் விளக்கம் வருமாறு:-
1. ளம் - இந்திரன், 2. ரம் - அக்கினி, 3. யம் - யமன். 4. ந்ரூம்- நிருதி, 5. வம் - வருணன், 6. ஹ்யம் - வாயு, 7. கம் - குபேரன், 8. ஈம் - ஈசானன்.
9. ஹ்லாம் - பிரமன், 10. ஹ்வீம் - திருமால், 11. ஹ்ரூம் - உருத்திரன், 12. ஹ்யைம் - மகேசுவரன், 13. ஹ - சதாசிவன், 14. அம்- விந்து, 15. அ - நாதம்.
16. கம் - கணபதி, 17. ஸம் - கந்தன், 18. நம் - நந்தி, 19. ரும்- இடபன், 20. ஸம் - மகாகாளன், 21. ப்ரும் - பிருங்கி, 22. ஹ்வம் - வீரபத்திரன். 23. சம் - சண்டன், 24. பம் - பைரவன்.
மையக் கட்டத்தில் இறைவன் எழுத்தாகிய சிகாரம் நிற்றலைக் காண்க
இவ் வரிசை எண் வழிபாட்டு முறை பற்றியது. நாயனார் சொல் சுருங்கிச் செய்யுளாமாறு பற்றியே கூறினார்; வழிபாட்டு முறை பற்றிக் கூறினாரல்லர், அஃது ஆசிரியன்மார் அறிவுறுக்க அறிந்து கொள்ளப்படும் ஆதலின்.
சக்கரத்தின் மேற்பக்கம் வடக்காகும். ஆன்மார்த்த வழி பாட்டில், வழிபடுவோர் வடக்குநோக்கி அமர்ந்திருக்க, வழி பாட்டிடம் மேற்குநோக்கிய நுழைவாயிலைக் கொண்டிருக்கும். அதனால், சக்கரத்தின் நுழைவாயிலும் மேற்கு நோக்கியே நிற்கும்.
அம்முறையில் இருத்தப்பட்ட இச்சக்கரத்தில் முதற்கண் திசை காவலரை இந்திரன் முதலாக ஈசானன் ஈறாக முறையே வலமாக வழிபட்டு, அதன்பின் பிரமன் முதலாக நாதம் ஈறாக முறையே வலமாக வழிபட்டு, மூன்றாவது கணபதி முதலாகப் பைரவர் ஈறாக முறையே வலமாக வழிபட்டு, வழிபாடு முடிந்த பின்னர் அம்முறையே ஒவ்வொரு மந்திரத்தையும் பத்து பத்து உருச் செபித்துப் பின் திரு வைந்தெழுத்தை நூற்றெட்டு முதலாக வேண்டும் அளவு செபிக்கலாம். இது, போக சாதன முறை.
முத்தி சாதன முறைக்குத் திசை காவலரைவழிபட்ட பின்னர்க் கணபதி முதலாகத் தொடங்கி நேரே வலமாகச் சென்று பைரவனோடு ஒரே வழிபாடாக முடிக்கப்படும். திருவைந்தெழுத்தும் இவ் இருமுறை கட்கும் ஏற்றவாறு செபிக்கப்படுதல், மேற் பலவிடத்தும் கூறப்பட்டது.
இச்சக்கரத்தை மேற்கூறியவாறு வைத்து நோக்கின், வலப் பாதி காரணக் கடவுளர் பகுதியாயும், இடப்பாதி காரியக் கடவுளர் பகுதியாயும் நிற்றல் காணலாம். இவையெல்லாம் மரபு வழி அறிய வைத்தார் என்க.
இவ்விரண்டு மந்திரங்களாலும் மேற்கூறிய சிற்றம்பலச் சக்கரத்தைச் சிவசக்கரமாகச் செய்து வழிபடுமாறு கூறப்பட்டது.
இதனுள், இந்திரதிசையில் சூரியனும், குபேரதிசையில் சந்திரனும் அடங்குவர். சூரியனிடத்து அங்காரகன் முதலிய ஐங்கோ ளினரும் அடங்குவர். உருத்திரனிடத்தில் உருத்திரர் யாவரும் அடங் குவர். வித்தியேசுரர்களும், மந்திர மகேசுரர்களும் மகேசுரனிடத்தில் அடங்குவர். அணு சதாசிவர்கள் சதா சிவனிடத்தில் அடங்குவர். நந்தி யிடத்துச் சிவகணங்கள் பலரும் அடங்குவர். பிருங்கியினிடத்து முனிவர்கள் அடங்குவர். இன்னும் பிற தேவர்களும் இந்திரனிடத்தே அடங்குவர். இங்குக்கூறிய தலைவர் பலர்க்கும் பரிவாரங்களாய் உள்ளவர்கள் அவ்வத் தலைவரிடத்தே அடங்கி நிற்றல் சொல்ல வேண்டா. இதனால், இச்சக்கரம் கடவுளர் பலரையும் புறஞ் சூழக் கொண்ட சிவசக்கரமாய் அமைந்து நிற்றல் அறிக.