ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்

பதிகங்கள்

Photo

ஓமென் றெழுப்பித்தம் உத்தம நந்தியை
நாமென் றெழுப்பி நடுவெழு தீபத்தை
ஆமென் றெழுப்பிஅவ் வாரறி வார்களே
மாமன்று கண்டு மகிழ்ந்திருந் தாரே.

English Meaning:
Vision Divine Dance

Chanting Om
Invoke Holy Nandi;
Chanting ``Na``
Kindle Kundalini Fire,
The goal to reach;
Make it blaze;
They who know Him thus
Verily saw Divine Dance,
For ever steeped in ecstasy.
Tamil Meaning:
மந்திரங்கட்கெல்லாம் தலையானதாகிய சிவமூல மந்திரமாம் திருவைந்தெழுத்தை முதற்கண் பிரணவமும், நகார மகா ரங்களும் முற்பட்டு நிற்க ஓதிப் பின்னர், அவ் ஐந்தெழுத்தில் நடுவண் விளக்குப்போல எழுச்சிபெற்று விளங்குகின்ற சிகாரம் முதலிய மூன் றெழுத்துக்களையும் அம்ச மந்திரத்தாற் செய்யப்படும் பிராணா யாமத்தால் இதய வெளியில் உள்ள ஒளி விளக்கமுறும்படி செய்து, தியானிக்கப்படும் பொருளை மேற்கூறிய சிகாரம் முதலிய மூன் றெழுத்தின் முறைமையதாகவே அறிந்து நிற்பவர்கள், திருவம் பலத்தை உள்ளவாறு தரிசித்து மகிழ்ந்திருப்பார்கள்.
Special Remark:
``நந்தி`` என்பது ஆகுபெயராய் அவனது மந்திரத்தை உணர்த்திற்று. ``உத்தமம்`` என்பது ஆகுபெயர்ப் பொருளைச் சிறப் பித்து நின்றமையால், ``உத்தம நந்தி`` என்பது இருபெயரொட்டாகு பெயர். இத் தொடரை முதலில் வைத்து உரைக்க. `நம என்று` என்பது ``நாம என்று`` எனவும் `அம் என்று`, என்பது ``ஆம்`` எனவும் தொடைக் கேற்ப வேண்டுந்திரிபு பெற்று நின்றன. ``நடுவெழு தீபம்`` என்பது இரட்டுற மொழிதலாய், சிகாரம் முதலிய மூன்றெழுத்துக்களையும், இருதய ஒளி யையும் குறித்து நின்றது. மூன்றெழுத்து நின்ற முறைமை யாவது, உயிர் பாசத்தை விடுத்து அருளைச் சார்ந்து அதுவழியாகச் சிவத்திற்கு அடிமையாதலாம். இவ் எழுத்துக்கள் இருதயத்தில் வைத்து எண்ணவும், புருவ நடுவில் வைத்துத் தியானிக்கவும் படும் என்க. இவை ``தத்துவமசி`` என்னும் வேதாந்த மகாவாக்கியப் பொருள், ``சிவத்துவமசி`` என்னும் சித்தாந்த மகாவாக்கியப் பொருள் என்ப வற்றையும் தந்து நிற்குமாறு அறிந்துகொள்க. `உண்மைத் திருவம் பலம்` என்றதற்கு ``மாமன்று`` என்றார். இது இதய வெளியும், புருவ நடுவுமாகும்.
``சிறைவான் புனல்தில்லைச் சிற்றம்பலத்தும் என்
சிந்தையுள்ளும் உறைவான்`` ( திருக்கோவையார் - 20)
எனப் புறத்தும், அகத்தும் விளங்கும் மன்றுகளைக் குறிப்பால் அருளிச் செய்தவாறு அறிக. இதனால், மேல் பலவாய்ப் பரந்து நிற்பவனவாகக் கூறிய மந்திரங்களுள், சிறந்து நிற்பதும் மிகச் சிறந்து நிற்பதும் இவை எனக்கூறி, அவற்றை ஓதுமாறும் அதனால் பெறும் பயனும் கூறப்பட்டன.