ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்

பதிகங்கள்

Photo

நகார மகார சிகாரம் நடுவா
வகாரம் இரண்டு வளியுடன் கூடி
ஒகாரம் முதற்கொண் டொருகால் உரைக்க
மகார முதல்வன் மனத்தகத் தானே.

English Meaning:
Chant Om Na Ma Si Va

Letters ``Na`` and ``Ma`` to commence,
Letter ``Si`` in centre,
Letter ``Va`` intoned in breath regulated,
Together with ``OM`` at beginning of all,
If you even once chant thus,
The Lord of ``Ma`` (Maya)
Will in your heart be.
Tamil Meaning:
நகார மகாரங்களை முன்னர் உடைய சிகாரம் நடுவணதாய் நிற்க, அவற்றின் பின்னதாகிய வகாரம் இடைகலை, பிங்கலை என்னும் இரு வாயுக்களுடன் பொருந்தி, ஓங்காரத்தை முதற்கண்ணே பெற்று ஓதப்படின், மேற்கூறிய எழுத்துக்களில் மகாரத்திற்கு முதல்வனாய் நின்று அதனைப் பரிபாகப்படுத்திவரும் சிவன், அங்ஙனம் ஓதுவாரது உள்ளத்தைத் தனக்கு இடமாகக் கொண்டு எழுந்தருளியிருப்பான்.
Special Remark:
``நடுவாய்`` என்றமையால், நகார, மகாரங்களை உடைமை முதற்கண்ணதாயிற்று. `நடுவாய் நிற்க` என ஒரு சொல் வருவிக்க. உரைக்க - உரைக்கப்பட. தூல பஞ்சாக்கரமாதலின் ஊன நடனப் பிரானையே கூறினார். மேல் இரண்டிடங்களில் (955, 56) எடுத்தோதிய `நமசிவ` என்பதனை முதலில் பிரணவத்தோடு கூட்டிப் பிராணாயமத்துடன் ஓதல் வேண்டும் என்பது உணர்த்தியவாறு.
``நாலாம் எழுத்தோசை`` (954) என்பது முதல், இதுகாறும் அஞ்செழுத்து நாலெழுத்தாயும் நிற்கும் முறைமையே கூறினார்.