ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்

பதிகங்கள்

Photo

பேர்பெற் றதுமூல மந்திரம் பின்னது
சோர்வுற்ற சக்கர வட்டத்துட் சந்தியில்
நேர்பெற் றிருந்திட நின்றது சக்கரம்
ஏர்பெற் றிருந்த இயல்பிது வாமே.

English Meaning:
How to Fill in the Mula Chakra

This the Mula Chakra famed,
In space between circles two
Fill entire with Letters Five stated,
Then does Chakra its loveliness take.
Tamil Meaning:
மேல் ``நம் பேர்`` என்றது சிவமூல மந்திரத்தை யாம். அதன் பேதங்களில் இறுதியானதாகிய சிகார வகாரங்கள் இணைந்துநிற்கும் மந்திரம், வளைந்து நிற்கும் வட்டங்கட்கு உள்ளே சதுரத்திற்கும் அவற்றிற்கும் இடையே உள்ள சந்தி அறைகளில் நிற்பதாம். இங்கு எடுத்துக்கொண்ட சக்கரத்தின் இயல்பு இவ்வாறாம்.
Special Remark:
இதனுள், சதுரத்திற்கு மேல் உள்ள சந்தி அறை ஒவ் வொன்றிலும் `சிவ` என்பது பொறிக்கப்பட வேண்டும் என்பது கூறப்பட்டமை காண்க. ``சக்கரம் ... ... இயல்பிது வாமே` என்றது முடித்துக்கூறி முற்றுவித்தது. சோர்வு, பொதுவாய் நிற்றல். `சோர்வுற்ற சந்தி` என இயையும். இதனுள், எல்லா மந்திரங்களும், எல்லா மூல எழுத்துக்களும் அடங்கியுள்ளன என்பது கருத்து. வடமொழி நோக்கில் எழுத்துக்கள் மிகப் பலவாதல் பற்றி அவையும் அடங்குதற் பொருட்டு அறை ஒன்றில் இரண்டெழுத்துக்களை அமைக்குமாறு விதித்தார். எனவே, இதனைத் தமிழ் முறையில், மேல்வரிசையில் உள்ள ஐந்து அறைகளில் மட்டும் `அ, இ, உ, எ, ஒ` என்னும் ஐந்து குற்றெழுத்துக்களோடு அவற்றிற்கு இனமான ஆ, ஈ, முதலிய ஐந்து நெட்டெழுத்துக்களையும் சேர்த்து இரண்டிரண்டெழுத்தாக முறையே எழுத, எஞ்சி நிற்பவை இருபது அறைகளாம். அவற்றில் முதல் இரண்டு அறைகளில் `ஐ, ஔ` என்னும் இரு நெட்டெழுத்துக்களை யும், அவற்றின்பின் `க,ங` முதல் `ன` ஈறான பதினெட்டெழுத்துக் களையும் எழுத, இருபத்தைந்து அறைகளும் எழுத்துக்களால் நிரம்பி நிற்கும்; வடமொழி வகையில் அமைந்த சக்கரத்தில் `க்ஷகாரம்` எழுதப் பட்ட இடத்தில் `அஃகேனம்` என்பதை எழுதலாம். `ஓம், ஹ்ரீம், ஹர, ஹரி, ஹம்ஸ:, ஸோஹம், ‹ிவ`என்பவற்றை, `ஓம், க்ரீம், அர, அரி, அம்ச, சோகம், சிவ` என எழுதிக் கொள்ளலாம். அகரம் முதலிய ஐந்து குற்றெழுத்துக்களைத் தமிழில் எழுதுவதில் தடையொன்றும் இல்லை. ஆதலின், இச்சக்கரம் வடமொழி கூறுவார்க்கேயன்றித் தமிழ் கூறுவார்க்கும் உரியதாதல் பெறப்படுதலின், அதனை, இவ்வாற்றால் அறிந்து செய்து கொள்க.
வடமொழியில், `எ, ஒ` என்னும் குற்றெழுத்துக்கள் இல்லை; ஆயினும், அவை மந்திரங்கட்கு வேண்டப்படுகின்றன. அதனால், தமிழிலிருந்து அவை அவற்றில் கொள்ளப்படுகின்றன. வடவெழுத் துக்களில் பல தமிழில் இல்லையாயினும் மந்திரங்களைத் தமிழாகக் கூறுமிடத்தில் தமிழ் முறையிலே அவை சொல்லப்படலாம். அது குற்றமாகாது. `குற்றமாம்` எனின், இந்நாயனாரும், பிற அருளா ளர்களும் அவற்றைத் தமிழ் முறைப்படியே கூறியிருத்தல் குற்றமாய் விடும். அம்முறை செய்யுட்களிற் கொள்ளப்பட்டது எனின், செய் யுளில் குற்றம் ஆகாத ஒன்று வழக்கில் குற்றமாய்விடும் என்றல் ஏற்கத் தக்கதாகாது. நாயனார் தம்மை, இறைவன் தன்னைப் பலபடியாலும் தமிழால் போற்றும் முறையை அருளிச் செய்யவே மூலன் உடம்பில் இருக்கவைத்தான் எனப் பாயிரத்துட் கூறியிருத்தல் 1 பொருட்படுத்தி உணரத்தக்கது.
பஞ்சப் பிரம மந்திரத்தின் பீசங்களுள் ஈசானம், தற்புருடம் இரண்டற்கும் முறையே `ஒ, எ` என்னும் குறில்களே கொள்ளற்பாலன என்பது ஏனைய மூன்றன் பீசங்களையும் நோக்கினால் நன்கு தெரியவரும். ஆயினும், அங்கு நெடிலே கொள்ளப்படுகின்றன. `பிரம மந்திரத்திற்குக் குறில்களும், கலா மந்திரம், அங்க மந்திரங்கட்கு நெடில்களும் பீசங்களாகும்` என்பதே அம் மந்திரங்களைக் கூறிய நூற்குக் கருத்தாகலின், பிரம மந்திரங்கள் இரண்டற்கு நெடிலைக் கொள்ளுதல் ஏற்புடைத்தாகாமை அறிக.
இவ் ஐந்து மந்திரங்களாலும் பெரியதொரு திருவம்பலச் சக்கரத்தின் இயல்பு கூறப்பட்டது.