ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்

பதிகங்கள்

Photo

ஆகின்ற சக்கரத் துள்ளே எழுத்தைந்தும்
பாகொன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும்
ஆகின்ற ஐம்பத் தொருவெழுத் துள்நிற்கப்
பாகொன்றி நிற்கும் பராபரன் றானே.

English Meaning:
Fifty-One Letters are Five-Letters Also

In Chakra that is designed
Are Letters Five in places appropriate;
There stands He the ParaPara (the transcendent Reality)
Who the Fifty One Letters fills.
Tamil Meaning:
மேற்கூறிய சக்கரத்தில் பாகுபட்டு நின்ற அறை களில் வழங்கப்படுகின்ற ஐம்பத்தோரெழுத்துக்களின் இடையே திருவைந்தெழுத்து நிற்குமாயின், கூத்தப்பெருமான் அந்தச் சக்கரத்தில் பாகுபோல இனிதாய ஆனந்த நடனத்தைப் பொருத்தி நிற்பன்.
Special Remark:
``எழுத்தைந்தும்`` என்பதை முதலிற்கொண்டு உரைக்க. ``வர்த்திக்கும், ஆகின்ற`` என்னும் பெயரெச்சங்கள், ``ஐம்பத்தொரு எழுத்து`` என்னும் தொகைநிலைப் பெயர் கொண்டு முடிந்தது. இறுதி யிலுள்ள பாகு, உவம ஆகுபெயர். `ஐந்தெழுத்து நிற்க ஆனந்த நடனத்தைப் பொருந்தி நிற்பவன்` எனவே `அவை நில்லாதபொழுது அருள் நடனமாத்திரையே பொருந்தி நிற்பான்` என்பது போந்தது. பதங்கள் - இடங்கள்; அறைகள். `ஐம்பத்தோரெழுத்து` என நிற்கற் பாலது, செய்யுள் நோக்கி, `ஐம்பத்தொரு எழுத்து` எனத் திரிந்து நின்றது.
இதனால், மேற்கூறிய சக்கரம் சிறந்து நின்று பயன் தருமாறு கூறப்பட்டது.