ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்

பதிகங்கள்

Photo

ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும்
ஐம்ப தெழுத்தே அனைத்தா கமங்களும்
ஐம்ப தெழுத்தேயும் ஆவ தறிந்தபின்
ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத் தாமே.

English Meaning:
Fifty Letters Come to Five Letters

Letters Fifty are Vedas all,
Letters Fifty are Agamas all,
When source of Letters Fifty are known,
Fifty Letters to Five Letters come.
Tamil Meaning:
மேற் சொல்லிய ஐம்பத்தோரெழுத்துக்களே வேதம், ஆகமம் அனைத்துமாய் நிற்கும். அவ் உண்மையை உணர்ந்த பின் `ஐம்பதெழுத்து அல்லது ஐம்பத்தோரெழுத்து` என்றெல்லாம் எண்ணுகின்ற அலைவு நீங்கி, `ஐந்தெழுத்து` என்று உணர்ந்து நிற்கின்ற அடக்கம் உண்டாகும்.
Special Remark:
`ஐம்பதெழுத்துமே` என்பதில் உம்மையும், ஏகாரமும் மாறிநின்றன. ஆவது, அனைத்தும் ஆவது. ``ஐம்பதெழுத்தும்`` என்றது, எல்லா வகையான எழுத்துக்களும்` என்றவாறு. எழுத்துக் களை, `ஐம்பத்தொன்று`என்பதனோடு, `ஐம்பது` என்றலும் வழக்கு என்பது உணர்தற்கு, மேல், ``ஐம்பத்தோரெழுத்து`` என்றவர், இங்கு, `ஐம்பதெழுத்து` என்றார். இது மூன்றாம் தந்திரத்திலும் விளக்கப் பட்டது. வேதம், ஆகமம் முதலிய பல நூல்களையும் கற்றோர், `அவை அனைத்திலும் சொல்லப்படுவது திருவைந்தெழுத்தின் பொருளே` என்பதை நன்குணர்வர் ஆதலின், ``ஐம்பதெழுத்தும் போய் அஞ்செழுத்தாமே`` என்றார்.
``அருள்நூலும் ஆரணமும் அல்லாதும் அஞ்சின்
பொருள்நூல் தெரியப் புகின்``
என்னும் திருவருட்பயனையும் காண்க. மூன்றாம் அடியில் ஏகாரம் பிரிநிலையும், உம்மை முற்றும்மையுமாம். ஆகவே, `ஐம்பதெழுத் துமே அனைத்துமாவது` என்பது பொருளாயிற்று.
இதனால், அனைத்தெழுத்துக்களும் மேற்கூறிய ஆறெழுத்தின் விரிவேயாதல் கூறப்பட்டது.
இது முதலாக, இருபத்தொரு மந்திரங்களால் திருவைந் தெழுத்தின் பெருமையே கூறி வலியுறுத்துகின்றார்.