ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்

பதிகங்கள்

Photo

பரந்தது மந்திரம் பல்லுயிர்க் கெல்லாம்
வரந்தரும் மந்திரம் வாய்த்திட வாங்கித்
துரந்திடு மந்திரம் சூழ்பகை போக
உரந்தரு மந்திரம் ஓம்என் றெழுப்பே.

English Meaning:
Power of Five-Letter Mantra

That Mantra spread everywhere
That Mantra its boon grants to lives all,
Do you chant it appropriate,
All hostility that harasses you shall flee;
It is the Mantra that makes you mighty and strong;
That Mantra do you invoke chanting OM.
Tamil Meaning:
மந்திரம் வகையாலும், விரியாலும், பலவாய்ப் பரந்து கிடப்பது. அதனால், அவை பலதிறத்து எல்லா உயிர்கட்கும் அவை விரும்பிய பயனைத்தரும் தன்மையன ஆதலின், உனக்கு உன் குரு வினது அருளால் மந்திரம் கிடைக்குமாயின் அதனைப் பெற்று அதன் துணையால் உன்னைச் சூழ்ந்துள்ள வினையாகிய பகை தொலையும் படி ஓட்டு. ஓட்டுமாறு எங்ஙனம் எனின், அதற்குரிய வலிமையை உனக்குத் தருகின்ற மந்திரத்தை முதற்கண் பிரணவத்தை வைத்து உச்சரி.
Special Remark:
பல திறமாவன, பிறப்புவகைகள். மூன்றாம் அடியில் உள்ள `மந்திரம்` என்பதை மேலே, ``வாய்த்திட`` என்பதற்கு முன்னே கூட்டுக. முதல் மூன்றடிகள் சொற்பொருட் பின்வருநிலை. மக்கள் உடம்பில் நின்ற உயிர் சில தீவினை காரணமாகக் கீழ்ப்பிறப்பை எடுக்குமாயின், அப்பிறப்பிலே அவை எவ்வகையாலேனும் மந்திரங் களை அறிந்து எண்ணிப் பயன்பெறும் என்பது உண்மை நூல் துணி பாகலின், ``பல்லுயிர்க்கெல்லாம் வரந்தரும்`` என்றார். அஃறிணை உயிர்கள் பல இறைவனை வழிபட்டுப் பயன்பெற்றமை புராணங் களில் பெரும்பான் மையது. இனி, `இங்கு உயிர்` என்றது, `மக்கள் உயிரையே` எனக் கொள் ளினும் கொள்க. `மந்திரங்கள் மேற்கூறிய ஆற்றலை உடையதாதல் அவற்றை இறைவன் தனக்கு வாயிலாகக் கொள்ளுதலாலே என்பது மேலை மந்திரத்தால் அறியக்கிடந்தது.
இதனால், இறைவன் உயிர்கட்குத் தனது அருளை வழங்கு தற்கு வாயிலாக மந்திரங்களை அமைத்துள்ள சிறப்புக் கூறப்பட்டது.