ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்

பதிகங்கள்

Photo

உண்ணும் மருந்தும் உலப்பிலி காலமும்
பண்ணுறு கேள்வியும் பாடலு மாய்நிற்கும்
விண்ணின் றமரர் விரும்பி அடிதொழ
எண்ணின் றெழுத்தஞ்சு மாகிநின் றானே.

English Meaning:
Lord in His Five Letters

He is Life`s Elixir,
He is Time Eternal,
He is Music`s melody,
The Celestials adore Him fervent;
In their thoughts He stood;
In Five Letters He stood.
Tamil Meaning:
சிவபெருமான், தேவர்கள் தன்னை விண்ணுலகத் தில் விருப்பத்தோடு அடிபணிய, அவர்கட்கு அவர்கள் உண்ணுகின்ற அமுதமாயும், அதன் பயனாகிய நீண்ட வாழ்நாளாயும், அவர்கட்கு விருப்பத்தைத் தருகின்ற இசையாயும், பாட்டாயும் நிற்றலேயன்றி, அவர்களது கருத்தில் நிற்கும் திருவைந்தெழுத்தாயும் நின்று மேலை மந்திரத்திற்கூறிய பயன்களை அளிப்பன்.
Special Remark:
மூன்றாம் அடியை முதலில் வைத்து, இரண்டாம் அடியிறுதியில், `அதுவன்றி` என்பது வருவித்து உரைக்க. ``நிற்கும்`` என முன்னவற்றை முடித்தமையால், பின்னதற்குப் பயன் மேற்கூறிய தாயிற்று. `எண்ணின்ற` என்பதில் அகரம் தொகுத்தலாயிற்று. ``அஞ்சும்`` என்ற உம்மை, `அவ்வாறு நின்றதன்றியும்` என, இறந்தது தழுவிநின்றது. `தேவர்களும் தாம் விரும்பிய பயனைப் பெறுதல் திருவைந்தெழுத்தை ஓதியே` என்பது இங்குக் கூறப்பட்டது.
``மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றுஅவர் தம்மை ஆள்வன
... ... ... அஞ்செழுத்தும்மே`` 1
என்ற திருஞானசம்பந்தர் திருமொழியும் காண்க. `தலைவன்` என்னும் எழுவாய் இயைபினால் வந்து இயையும்.