ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்

பதிகங்கள்

Photo

தான்ஒன்றி வாழ்இடம் தன்னெழுத் தேயாகும்
தான்ஒன்றும் அந்நான்கும் தன்பேர் எழுத்தாகும்
தான்ஒன்று நாற்கோணம் தன்ஐந் தெழுத்தாகும்
தான்ஒன்றி லேஒன்றும் அவ்அரன் தானே.

English Meaning:
The Configuration of the 121 Lettered Chakra Diagram

In his own Letter ``Si``, He abides;
The four letters conjoint are great Letters of His name
On the four sides of His Chakra His own Five letters
In the One letter He abides is Hara`s mantra too.
Tamil Meaning:
தான்மேலே குறிக்கப்பட்ட பெருமான், ஒன்றி வாழ்தல், நடுவிடத்தை ஒட்டியிருத்தல். தன் எழுத்து சிகாரம். தன்பேர் எழுத்து, தனது திருப்பெயராகிய மூல மந்திர எழுத்துக்கள். அவற்றுள் சிகாரமாகிய ஒன்று முன்னே கூறப்பட்டமையின், இவை ஏனைய நான் கெழுத்துக்களாம். நாற்கோணம், நான்கு திசைகளிலும் இடை வெளி யாய் நீண்டு, நான்கு மூலைகளிலும் ஒவ்வொரு சக்கரத்தைப் பிரித்து நிற்கும் நேர்க்கோட்டு அறைகள். அவைகளில் ஐந்தெழுத்துக் களும் சிகாரம் முதலாக அமையும். ஒன்றிலே ஒன்றுதல், நடுவண தாகிய ஓர் அறையிலே பொருந்துதல். அரன், `ஹர`: என்னும் மந்திரம். இஃது `ஓம்` என்பதனை முன்னர்க்கொண்டு நிற்கும் என்பது ஆற்ற லால் விளங்கும்.
Special Remark:
இடத்தில் நிற்பவற்றை ``இடம்`` என்றார். ``அந்நான்கு`` என்றதும், `எஞ்சிய நான்கிடங்களில் நிற்கும் எழுத்துக்கள்` என்றதேயாம். ``அவ்வரன்`` என்பதில் அகரம் பண்டறிசுட்டு. ``அரன்`` என்னும் சொல் இங்குத்தன்னையே குறித்து நின்றது. ஈற்றில் நின்ற `தான்`, அசை. ஏகாரம், `அரனாகிய` எனத் தேற்றமாயிற்று. இனி இச்சக்கரத்தைப் புலப்படக் காணுமாறு கீழே காண்க.
பெருந்திசை நான்கில் நான்கு சிகாரங்களும், கோணத்திசை (மூலை கள்) நான்கில் நான்கு சிகாரங்களும் உள்ளன. அவற்றை முதலாகத் தொடங்கி, `சிவாயநம` என ஓதுதல் வேண்டும். அங்ஙனம் ஓதுங்கால் பெருந்திசையில் உள்ள சிகாரம் ஒவ்வொன்றும் இருமுகமாகத் தொடர் தலும், கோணத் திசையில் உள்ள சிகாரம் ஒவ்வொன்றும் மூன்று முகமாகத் தொடர்தலும் காணலாம். ஆகவே, அவற்றைக் கிழக்கு முதலாகத் தொடங்கி வட கிழக்கில் மூன்று முகமும் ஓதி முடித்தால், இருபது (20) உருச் செபித்தலாகும். அவ்வாறு ஐந்து முறை திரும்பத் திரும்ப ஓதி, அதன் பின்னர்ப் பெருந்திசை முதலாக மட்டும் தொடங்கி ஓதி முடித்தால், நூற்றெட்டு (108) உருச் செபிக்கப்பட்டு முடியும். ஐம்பது முறை முற்ற ஓதி, இறுதியில் மேற்சொன்னவாறு பெருந் திசையில் தொடங்கிமட்டும் ஓதி முடித்தால், ஆயிரத்தெட்டு (1008) உருச் செபிக்கப்பட்டு முடியும். சித்தி பெறும் வரையில் இவ்வாறே இச்சக்கரத்தை வழிபட்டுப் பலமுறை ஓதுதல் செய்யத்தக்கதாம்.