ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்

பதிகங்கள்

Photo

மட்டவிழ் தாமரை மாதுநல் லாளுடன்
ஒட்டி யிருந்த உபாயம் அறிகிலர்
விட்ட எழுத்தை விடாத எழுத்துடன்
கட்டவல் லார்உயிர் காக்கவல் லாரே.

English Meaning:
Significance of Letter Om

They know not how the Lord
Became conjoint with her,
Who, on the blooming lotus sits;
They who chant the letter aspirated ``O``
Conjoint with the letter unaspirated ``m``
May well preserve their life ever.
Tamil Meaning:
தேனோடு மலர்கின்ற இதயத் தாமரையுள் சிவன் அருட் சத்தியுடன் எழுந்தருளியிருக்கும் முறையை மக்கள் அறி கின்றார்களில்லை. அதனை அறிந்து பாசங்களை நீக்கி விட்ட ஆன்ம எழுத்தைச் சிவத்தை ஒருபோதும் விட்டு நீங்காத அருளெழுத்துடன் பிணைக்கவல்லவர் உளராயின், அவரே தம்மைப் பிறவிக்கடலில் வீழ்ந்து அழியாமல் காத்துக்கொள்ள வல்லவராவர்.
Special Remark:
மேற்கூறிய சக்கரத்தில் நடுவண் நிற்கும் ஓர் அறை இதயத் தாமரையாக அறியத்தக்கது என்பது முதலிரண்டடிகளில் குறிப்பாற் கூறப்பட்டது. அவ்வறையைச்சூழ எல்லா இடத்தும் சிகாரம் நிற்றலைச் சிவன் சத்தியோடு ஒட்டியிருத்தலாகக் கூறினார். பின் இரண்டடிகளால் மேல், ``தானொன்றும் அந்நான்கும் தன்பேரெழுத் தாகும்`` (898) எனக் குறித்ததை, `வாயநம` என, எழுத்து இவை என்ப தும், அவை பொறிக்கப்படும் முறையும் இனிது விளங்கக் கூறினார். இச்சக்கரத்தில் உள்வட்டம் மூன்றும் அக வட்டங்களும், வெளி வட்டங்கள் இரண்டும் புறவட்டங்களும், ஆதலின், பாச எழுத்துக்கள் புறவட்டத்திலும், அவற்றுள்ளும் மல எழுத்து விளிம்பு வட்டத்திலும் நிற்பவாயின என்க. தேன், இதயத்தாமரையில் சிவானந்தமாம்.