ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்

பதிகங்கள்

Photo

அண்ணல் இருப்ப தவளக் கரத்துளே
பெண்ணினல் லாளும் பிரானக் கரத்துளே
எண்ணி இருவர் இசைந்தங் கிருந்திடப்
புண்ணிய வாளர் பொருளறி வார்களே.

English Meaning:
Siva and Sakti Interchange Their Bija Mantra States

The Lord is seated in His Consort`s Letter (Sauh)
The Mother is seated in Her Lord`s Letter (Hum)
When thus the Two are in amity seated
The holy beings comprehend the meaning inner.
Tamil Meaning:
சிவனும், சத்தியும் தம்முள் வேறல்லர். ஆதலால், அவருள் ஒருவர்க்கு உரிய பீசங்களிலும், மந்திரங்களிலும் மற் றொருவர் பொருந்தியே நிற்பர். என்றாலும் இருவரையும் வேறுபோல எண்ணி, இருதிறத்து மந்திரங்களையும் செபிக்கின்ற செயல் உடையவர்களே மெய்ப்பொருளை உணரப் பெறுவார்கள்.
Special Remark:
`உண்மையில் இருவரும் வேறல்லராயினும் வழி பாட்டில் வேறுபோல நின்றே பயன் தருவர்; ஆதலின், அவ்வாறே வழி படல் வேண்டும்` என்பதாம். வழிபாட்டில் அவ்வாறு நிற்றல் வழிபடு வோரது இயல்புபற்றி என்க.
`உள்ளே` என்பவற்றுள் இரண்டாவதன் இறுதியில், `இருக்கும்` என்பது எஞ்சிநின்றது. `எனினும் வேறுபோல எண்ணி` என்க. இப்பொருட்கு, ``அக்கரம்`` என்பன ஒருமருங்கு ஆகு பெயராம். ``இருந்திட`` என்பது ``ஆளர்`` என்பதில் ஆளுதல் தொழிலோடு முடிந்தது.
இனி, இதற்கு மற்றோர் உரை:- சிவனது எழுத்தும், சக்தியின் எழுத்திற்கு இடையில் நிற்கும். அவ்வாறே, சக்தியின் எழுத்தும் சிவன் எழுத்திற்கு இடையில் நிற்கும். இந்நிலைமையை ஓர்ந்துணர்ந்து, இருவரது எழுத்துக்களும் இணைந்திருக்கச் செபிக்கும் செயல் உடையவர்களே மெய்ப்பொருளை உணரப் பெறுவார்கள்.
கு-ரை: இவ்வுரையாற் பெறப்படுவது, `சிவ` என்னும் மந்திரமே யாதலும், அதனைத் தொடர்பாக ஓத, சிவசத்தியரது எழுத்துக்கள் மேற்கூறியவாறு நிற்றலும் அறிந்துகொள்க. இப் பொருட்கு, ``அண்ணல், நல்லாள்`` என்பன ஆகுபெயர்கள். இவ் இரண்டனையும் இதற்கு உரையாகக் கொள்க.
இதனால், மேலைச் சக்கரத்துள், பொறிக்கத்தக்க மந்திரங்களுள் தலையாயதன் சிறப்புக் கூறப்பட்டது.