ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்

பதிகங்கள்

Photo

ஆகின்ற பாதமும் அந்நவ்வாய் நின்றிடும்
ஆகின்ற நாபியுள் அங்கே மகரரமாம்
ஆகின்ற சீஇரு தோள்வவ்வாய்க் கண்டபின்
ஆகின்ற அச்சுடர் அவ்வியவ் வாமே.

English Meaning:
Five-Letter Form of Siva

His Feet are Letter ``Na``
His navel is Letter ``Ma``
His shoulders are Letter ``Si``
His mouth is Letter ``Va``
His cranial centre aloft is Letter ``Ya``
—Thus Five-Letter Form of Siva is.
Tamil Meaning:
திருவைந்தெழுத்தில் நகாரம் கூத்தப் பெரு மானுக்குத் திருவடியாயும், மகாரம் வயிறாயும், சிகாரம் தோள் களாயும், வகாரம் முகமாயும், யகாரம் சென்னியாயும் நிற்கும்.
Special Remark:
இவ்வாறே உண்மை விளக்க நூலிலும் கூறப்படுதல் காண்க. (வெண்பா - 33). ஆதல் - மந்திரமேயாதல். மூன்றாம் அடி யிலும், `ஆகின்ற இருதோள், ஆகின்ற வாய்` எனக் கூட்டிக் கொள்க. `இரு தோள் வாய் சீ வவ்வாகக் கண்டபின்` என, ஆக்கம் வருவிக்க. `சி` என்பது நீட்டல் பெற்றது. சுடர் - ஒளி. அஃது ஆகுபெயராய் அதனையுடைய தலைக்கு ஆயிற்று. ஒளி சடையினால் உளதாவது. `அவ்வியல்பாமே` என்பது, பாடம் அன்றாதல் அறிக. அடுத்த மந்திரம், `அவ்வியல்பு` எனத் தொடங்குவதாயினும், இதனுள், ``அவ் விய`` என்பதே அதற்கு அமையும். மேலை மந்திரத்துள் ``ஆம்`` என்ற அதனைக் கொண்டே இம்மந்திரம் ``ஆகின்ற`` எனத் தொடங்கிற்று. `அவ்ய` என்பது இடையே இகரம் விரித்தல் பெறநின்றது.
திருவைந்தெழுத்து இம்முறையால் இறைவனுக்குத் திருமேனி யாதல் கூறவே, அவனை வழிபடுபவரும் தம் உடல் உறுப்புக்களில் அதனை இம்முறையில் நியாசம், திருநீற்றுத் திரிபுண்டரம் இடல் முதலியவற்றால் பொருந்தக் கொள்ளல் முறையாதலும் பெறப்பட்டது.
இதனால், மேற்கூறிய மந்திரம் இறைவனுக்குத் திரு மேனியாய் நிற்கும் முறை வகுத்துக் கூறப்பட்டது.