ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்

பதிகங்கள்

Photo

நீரில் எழுத்திவ் வுலகர் அறிவது
வானில் எழுத்தொன்று கண்டறி வாரில்லை
யாரிவ் வெழுத்தை அறிவார் அவர்களே
ஊனில் எழுத்தை உணர்கிலார் தாமே.

English Meaning:
Heavenly Letter Ends Birth

The knowledge of Jiva here below
Is unto letters written on water;
There is a Letter in heaven
They seek it not;
Who knows that Letter?
They who know it,
Have birth ended.
Tamil Meaning:
இவ்வுலகத்தில் உள்ள பலரும் அறிதல் நீர்மேல் எழுத்துப் போலும் அழியும் எழுத்துக்களையேயாம். மேலை வெளியில் அழியாத எழுத்து ஒன்று உள்ளது. அதனை அறிபவர் ஒருவரும் இல்லை. அதனை அறிபவர் எவரோ அவரே உடம்பில் நின்று அறியும் நிலையில்லாத எழுத்தை அறியாதவர் ஆவர்.
Special Remark:
`நீர்மேல் எழுத்துப்போல பிற எழுத்துக்கள் நிலையில் லாதன அல்ல எனப் பொதுவாகக் கருதப்பட்டாலும் உண்மையில் அவையும் நிலையில்லாத எழுத்துக்களே` என்பது முதலடியில் உணர்த் தப்பட்டது. ``வான்`` என்றது, ஏற்புழிக் கோடலால் மேலை வெளி யாயிற்று. மேலை வெளியாவது விந்து. அதன்கண் உள்ள எழுத்துப் பிரணவம். வழக்கிடத்தும், செய்யுளிடத்துமாக அறியப்படும் எழுத் துக்கள் உடம்பில் இயல்பாக நின்று அறியப்படுவனவாதல் அறிக. ``ஊனில் எழுத்து`` என்றது, உலகப் பொருளைக் குறித்த குறிப்பு மொழி. ``உணர்கிலர்`` என்றது, `அவற்றை உணர்ந்து அவற்றில் தொடக்குறுதலினின்றும் நீங்குவர்` என்றவாறு. இதனுள் இடையீட்டெதுகை வந்தது.
இதனால், மேற்கூறிய பிரணவ யோக செபம் பாசத்தின் நீங்குதற்கு வாயிலாதல் கூறப்பட்டது.