ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்

பதிகங்கள்

Photo

நாடும் பிரணவம் நடு இரு பக்கமும்
ஆடும்அவர் வா அமர்ந்தங்கு நின்றது
நாடும் நடுஉள் முகம்ந மசிவாய
வாடும் சிவாயநம புறவட்டத் தாயதே.

English Meaning:
A Variation of the Six-Letter Yantra

Describe Letter Pranava (OM)
In the Centre on top place `Si`
On sides two place letters `Va` and `Ya`
Inside inscribe Na Ma Si Va Ya
On the outer round figure Letters Si Va Ya Na Ma.
Tamil Meaning:
மேற்சொல்லிய தூலசக்கரத்தில்தானே முன் சொன்ன எழுத்துக்களை நீக்கி நடுவிடத்தில் நடுவிலே பிரணவத் தையும், (நடுவிடத்தை இருமுக்கோணத்தின் கூட்டாகக் கருதி) மேல் முக் கோணப் பகுதியில் சிகாரம் நான்கும், கீழ் முக்கோணப் பகுதியில் வகாரம் நான்கும், நடுவிடத்தைச் சூழ்ந்துள்ள உள்வட்டக் கட்டங்கள் எட்டினையும் முன்சொன்ன வாறே பகுதிப்படக் கருதி மேற் பகுதி அறை ஒவ்வொன்றிலும் `நம` என்பதனையும், கீழ்ப் பகுதி அறை ஒவ்வொன்றிலும் `ய` என்பதனையும், சுற்று வட்டத் தின் (விளிம்பு வட்டத்தில்) மேற் புறத்து இடப்பக்க மூலையிலும், கீழ்ப்புறத்து வலப்பக்க மூலையிலும், `சி` என்பதை நிறுத்தி, அவற்றின் இருபக்கக் கட்டங் களிலும் முறையே, `வா, ய, ந, ம` என்னும் எழுத்துக்களையும் பொறித்து வழிபட்டுச் செபிக்க.
Special Remark:
இதன் வடிவம் வருமாறு:-
இதனுள், பிரணவத்தை முதலிற் கொண்டு, `நமசிவாய` என்பதை நான்கு முறையாலும், `சிவாயநம` என்பதை நான்கு முறையாலும் செபிக்க ஒரு வட்டமாம். ஐம்பத்து நான்குவட்டம் செபிக்க தூல சூக்கும பஞ்சாக்கரங்கள் தனித்தனி நூற்றெட்டு உருவாக முடியும். இருநூற்று ஐம்பத்து நான்கு வட்டம் செபிக்கின் அவை தனித்தனி ஆயிரத்தெட்டு உருவாக முடியும்.
இவற்றுள், தூல பஞ்சாக்கரத்தில் பாச எழுத்து இரண்டும் தம்முள் இணைந்தும், பதி எழுத்து இரண்டும் தம்முள் இணைந்தும் ஆன்ம எழுத்து அருளெழுத்தோடும், திரோதான எழுத்தோடும் தொடர்புற்றும் நிற்றல் அறிந்துகொள்க.
சமட்டிப் பிரணவத்தோடு `தூலம், சூக்குமம்` என்னும் இருபஞ்சாக்கரங்களும் செபிக்கப்பட நிற்றலால் இது சூக்குமா சூக்கும திருவம்பலச் சக்கரமாகும். சூக்கும சக்கரம் தவிரப் பிற்கூறிய இரண்டிற்கும் தலை, கால் பக்கங்கள் உளவாதலை அறிக.
இதுகாறும் விளக்கப்பட்டு வந்தவற்றுள் சூக்கும சக்கரம் வீடுபேற்றினை விரும்புவோர்க்கும், தூல சக்கரம் உலக இன்பத்தை விரும்புவோர்க்கும், சூக்குமா சூக்கும சக்கரம் இரண்டனையும் விரும்புவோர்க்கும் உரியனவாம் என்க.
இதனால், வேறொருவகைத் திருவம்பலச் சக்கரம் கூறப் பட்டது.