ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்

பதிகங்கள்

Photo

அகாரம் உயிரே உகாரம் பரமே
மகாரம் மலமாய் வரும்முப்பத் தாறில்
சிகாரம் சிவமா வகாரம் வடிவா
யகாரம் உயிரென் றறையலும் ஆமே.

English Meaning:
What ``Aum`` and ``Sivaya`` Stand For

Letter ``A`` is Jiva; ``U`` is Para ``Ma`` is Mala
Thus it is in Three-lettered Word ``A U M``
``Si`` is Siva; ``Va`` is Sakti;
``Ya`` is Jiva—
Thus it is, Three Letter-Word Si Va Ya.
Tamil Meaning:
முப்பத்தாறு தத்துவங்களில் ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும் அகாரத்தைப் பற்றியும், சிவ தத்துவம் ஐந்தும் உகாரத்தைப் பற்றியும், வித்தியா தத்துவம் ஏழும் மகாரத்தைப் பற்றியும் நிற்கும். இனித் திருவைந்தெழுத்தில் சிறப்புடைய மூன்றில் அவ்வாறின்றிச் சிகாரம் சிவமும், வகாரம் சத்தியுமேயாக, யகாரம் ஆன்மாவேயாம் என்று சொல்லுதலும் கூடும்.
Special Remark:
மேல் பிரணவ கலைகளையும், திருவைந்தெழுத்தை யும் ஒப்ப வைத்துக் கூறிவந்தமைபற்றி மயங்காமைப் பொருட்டு இவ்வாறு கூறி அக்கலைகளினும் திருவைந்தெழுத்துக்கள் உயர்ந்தன வாதலை விளக்கினார்.
``முப்பத்தாறில்`` என்பதை முதலில் வைத்து உரைக்க. ``முப்பத்தாறில்`` என்றதனால், `உயிர், பரம், மலம்` என்பன அவை பற்றிய தத்துவங்களே ஆதல் விளங்கும். `மலம்` என்றது, `அசுத்தம்` என்னும் பொருட்டாய், அசுத்தமாயா தத்துவங்களை உணர்த்திற்று. வடிவு - சிவனது உருவம்; அது சத்தியாதல் அறிக. `சிவம், வடிவு, உயிர்` என்பவற்றில் தேற்றேகாரங்கள் தொகுத்தலாயின. அவற்றால், அவற்றின் பொருள்கள் சடமாகாது சித்தாதலும் அப்பொருள்களோடு அவ்வெழுத்திற்கு உள்ள பேருரிமையும் தோன்றுவனவாம். அவை பற்றியே ``அறையலும் ஆம்`` என உயர்வு சிறப்பும்மை கொடுத்துக் கூறினார்.