ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்

பதிகங்கள்

Photo

ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலர்
ஆறெழுத் தொன்றாக ஓதி உணரார்கள்
வேறெழுத் தின்றி விளம்பவல் லார்கட்கு
ஓரெழுத் தாலே உயிர்பெறல் ஆமே.

English Meaning:
Chant Aum and Be Redeemed

They who chant the Six-Letter Mantra (Om Si Va Ya Na Ma)
Are they who truly know;
They who chant not the Six-Lettered Mantra
Are they who know not;
Even they who chant with other letter none,
May with One-Letter (AUM) redeemed be.
Tamil Meaning:
திருவைந்தெழுத்தைப் பிரணவத்தோடு சேர்த்து ஆறெழுத்தாக ஓதி உணரும் உணர்வின் பயனை அறிபவர் உலகில் ஒருவரும் இல்லை. அதனால், அந்த மந்திரத்தை ஒப்பற்ற ஒன்றாகக் கொண்டு ஓதிப் பெறும் உணர்வையும் யாரும் அடைவதில்லை. வேறு மந்திரத்தை அதற்கு நிகரானதாக நினையாமல் அந்த மந்திரம் ஒன்றையே ஓத வல்லவர்கட்கு அதன்கண் உள்ள ஓர் எழுத்தாலே ஆன்ம லாபத்தைப் பெறுதல் இயையும்.
Special Remark:
ஈரிடத்தும் ``ஆறெழுத்து`` என்றே ஓதினாராயினும், `அவ் ஆறெழுத்து` எனச் சுட்டி ஓதுதலே கருத்து. ``இன்றி`` என்றதும், `இணையில்லையாக` என்றவாறு. ``ஓரேழுத்து`` என்றது பொதுப்பட நின்று, சிகாரமாகிய அவ்வொன்றின்மேல் நோக்குடையதாய் நின்றது. இதன்கண் உயிரெதுகை வந்தது.
இதனால், மேற்சொல்லப்பட்ட மந்திரங்கள் பலவற்றுள் திருவைந்தெழுத்து இன்றியமையாச் சிறப்பினதாய் ஆன்ம லாபத்தைத் தருவதாதல் கூறப்பட்டது.