ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்

பதிகங்கள்

Photo

கூடிய எட்டும் இரண்டும் குவிந்தறி
நாடிய நந்தியை ஞானத்துள் ளேவைத்து
ஆடிய ஐவரும் அங்குற வாவர்கள்
தேடி யதனைத் தெளிந்தறி யீரே.

English Meaning:
Chant Aum and Win Senses

Know ``A`` and ``U`` together (AUM) in depth
Seek Nandi in Jnana within,
The Five wavering senses,
Your friends become;
Chant AUM and be doubt-free.
Tamil Meaning:
அறிவுடையோர் நாடி நிற்கின்ற சிவனை அறிவின் கண் உள்ளவனாக உணர்ந்து, அவ்வறிவைப் பெறுதற்கு அகார உகாரங்களின் கூட்டாகிய ஓகாரத்தையாவது அல்லது யகாரத்தை யாவது நீயாக மனம் ஒருங்கித் தியானி. அங்ஙனம் தியானித்தால் இது காறும் உன்னோடு மாறுபட்டுப் போராடி வந்த பஞ்சேந்திரியங்களும் உன் வயத்தனவாய் உனக்குத் துணைசெய்து நிற்கும். ஆதலால், அவ் இந்திரியங்களை வயப்படுத்த நீ தேடிக்கொண்டிருந்த வழியை இவ்வாறு தெளிந்தறிக.
Special Remark:
`எட்டு` என்னும் எண்ணின் வடிவம் `அ` என்பதும், `இரண்டு` என்னும் எண்ணின் வடிவம் `உ` என்பதும் ஆதலால், அவற்றைக் குறிக்கும் குறிப்பு மொழியாக முறையே, `எட்டு` என்பதும், `இரண்டு` என்பதும் குழூஉக்குறியாகச் சொல்லப்படுதல் வழக்கம். `கூடிய அ, உ` என்றதனால், `ஓகாரம்` என்பது விளங்கிற்று.
இனி, இஃது, எட்டும், இரண்டும் கூடிய வழி ஆவது பத்தாத லின், `பத்தின் வடிவமாகிய யகரம்` என்பதும் பொருளாகும். ஆகவே, ஆன்மா தன்னை அசுத்த தத்துவங்களினின்றும் வேறாகக் காணுதற்குத் தன்னைப் பிரணவ வடிவாகவேனும், திருவைந்தெழுத்தில் யகார வடிவாகவேனும் உணர்தல் வேண்டும் என்பது இதனால் உணர்த்தப் பட்டதாம். ``எட்டினோடிரண்டும் அறியே னையே`` (திருச்சதகம் - 53) என்ற திருவாசகத் தொடரும் இங்கு நினைக்கத் தக்கது.
இரண்டாம் அடியை முதலில் வைத்து உரைக்க. தேடியது - தேடப்பட்டது. ஈற்றில், ``அறியீர்`` என்றது, உயர்த்தற்கண் வந்த பால் வழுவமைதி. திருவம்பலச் சக்கரத்தில் அமைந்த மந்திரங்களுள், திருவைந் தெழுத்தின் சிறப்பினைப் பல்லாற்றானும் வலியுறுத்தி ஓதியபின், இதுமுதலாகப் பிறவற்றின் சிறப்பை வலியுறுத்துகின்றார்.