ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்

பதிகங்கள்

Photo

ஐந்தின் பெருமையே அகலிட மாவதும்
ஐந்தின் பெருமையே ஆலய மாவதும்
ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும்
ஐந்தின் வகைசெயப் பாலனும் ஆமே.

English Meaning:
Chant Five Letters and Be Forever Young

Spaces vast arise from Five Letters great
Temples Holy are Five Letters great
Grace of Lord is Five Letters great
Chant Five Letters great,
You shall ever young be.
Tamil Meaning:
உலகம் நிலைபெற்றிருத்தலும் கல் முதலியவற்றால் கட்டப்பட்டு அமைந்த இடங்கள் சிவபெருமானது அருள் நிலையங் களாதலும், அந்நிலையங்களில் அவன் விளங்கி நின்று, வேண்டு வார்க்கு வேண்டுவன வழங்குதலும் திருவைந்தெழுத்தாலேயாகும். இனி, அதனை அதன் வகை பலவற்றையும் அறிந்து ஓத, அப்பெருமான் அங்ஙனம் ஓதுவாரது பக்கத்திலே எப்பொழுதும் இருப்பவனாவான்.
Special Remark:
அகலிடம் - உலகம்; என்றது உயிர்களை. `அவை நிலைபெறுதல்` என்பதனை,
``வானின் றுலகம் வழங்கி வருதலால்`` 1
என்பது போலக் கொள்க. ``ஆலயம் ஆவது`` என்றது `ஆலயம் ஆலயமாவது` என்றவாறு. `சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடன்` என்னும் முறைமையிற் சிறிதும் வழுவாதவன் என்பார், `சிவபெருமானை, `அறவோன்` என்றார். செய்தல், இங்கே ஓதுதல். பால் - பக்கம். பாலன் ஆதலை,
``இவன்எனைப் பன்னாள் அழைப்பொழி யான்என்
றெதிர்ப்படுமே`` 1
``எங்குற்றாய் என்றபோதில்
இங்குற்றேன் என்கண்டாயே`` 2
``தோன்றாத் துணையாய் இருந்தனன்
தன்னடியோங்களுக்கே`` 3
``ஆரூரர்தம் - அருகிருக்கும் விதியன்றி அறம் இருக்க
மறம்விலைக்குக் கொண்டவாறே`` 4
என்பன முதலிய திருமொழிகளை நோக்கி அறிக.
``சிவனே சிவனே சிவனேஎன் பார்பின்
சிவன்உமையா ளோடுந் திரிவன்``
என்பதொரு வெண்பாவையும் காண்க. இதன் முதலடி மூன்றாம் அடிகளில் னகர ஒற்றுக்கள் அலகு பெறாது நின்றன.