ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்

பதிகங்கள்

Photo

நாலாம் எழுத்தோசை ஞாலம் உருவது
நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கிற்று
நாலாம் எழுத்தே நவிலவல் லார்கட்கு
நாலாம் எழுத்தது நன்னெறி தானே.

English Meaning:
Chant Sakti`s Letter Va

In the sound of Fourth Letter (Va) world takes form,
In the sound of Fourth Letter is World contained,
For them who chant Fourth Letter incessant,
The Fourth Letter is Way Holy.
Tamil Meaning:
மேற்கூறிய எழுத்துக்களில் பிரணவம் நீங்க நகாரம் முதலாக முறையானே நின்ற ஐந்தெழுத்துக்களில் இறுதிநின்ற யகாரம் ஒழித்து நான்காய்நின்ற எழுத்துக்களது ஓசையே உலகெங்கும் வியாபிப்பது. அதனால், எல்லா உலகமும் அவ்வெழுத்திற்குள்ளே அடங்கியுள்ளன. அதனால், அவற்றாலாய அவ்வோசையின் பெருமை அறிந்து அதனையே ஓதவல்லவர்கட்கு அதுவே நன்னெறி யாய் நன்மை பயக்கும்.
Special Remark:
கடவுளரைப் போற்றுமிடத்து அவர்தம் பெயரோடு பெரும்பான்மையும் நான்காம் வேற்றுமையைப் புணர்த்து அவரைப் படர்க்கையில் வைத்துப் போற்றுதல் வடமொழி வழக்கு. அப்பெயர் களைப் பெரும்பான்மையும் எட்டாம் வேற்றுமையாக்கி அவரை முன்னிலைப் படுத்திப் போற்றுதல் தமிழ் வழக்கு. அதனால், ``சிவாய`` என்பது தமிழ் முறையில் `சிவ` என்றே நிற்குமாதலின், `சிவமூல மந்திரம், மேல், ``ஆறெழுத்தோதும்`` என்ற மந்திரத்துட் கூறியவாறு பிரணவத்தோடு கூடி ஆறெழுத்தாலேயன்றி, யகாரம் நீங்க ஐந்தெழுத் தாயும் நிற்றலுடையது` என்பது உணர்த்துவார் ஐந்தெழுத்தின் பெருமையெல்லாம் எடுத்தோதினார். எனவே, யகாரம் அவற்றுள் அடங்கி நிற்பதாயிற்று. `இம் மந்திரத்திற்கு இதுவே பொருள்` என்பதை வருகின்ற மந்திரங்களால் அறிக.
நால் ஆம் எழுத்து - `நான்கு` என்னும் தொகையை உடைய வாகின்ற எழுத்து. `அவற்றால் ஆய ஓசை` என்றது, `மந்திரம்` என்ற வாறு. ``உருவுவது`` என்பது குறைந்து நின்றது. எழுத்து அது - எழுத்தாய் நின்ற அம்மந்திரம். `அதுவேயும்` என்னும் பிரிநிலை ஏகாரமும், இறந்தது தழுவிய எச்ச உம்மையும் விரித்துக் கொள்க.