ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்

பதிகங்கள்

Photo

மறையவன் ஆக மதித்த பிறவி
மறையவன் ஆக மதித்திடக் காண்பர்
மறையவன் அஞ்செழுத் துள்நிற்கப் பெற்ற
மறையவன் அஞ்செழுத் தாம்அவர் தாமே.

English Meaning:
Lord of Vedas in Letter-Five

He, Lord of Vedas, gave us this birth,
That we might the Lord of Vedas become;
The Lord of Vedas stood within Letter-Five;
The Lord of Vedas is Himself Letter-Five.
Tamil Meaning:
ஆன்மா மந்திர ஆன்மாவாய் விளங்கிச் சிவமாக வேண்டியே சிவபிரானால் கொடுக்கப்பட்டது மக்கட்பிறவி. ஆகவே, அதில் நிற்கும் ஆன்மா அங்ஙனமே மந்திர ஆன்மாவாய் விளங் குதலை அறிந்து அப்பெருமான் மகிழ்வதைக் காணக்கூடியவர்கள், எல்லா மந்திர வடிவினனுமாயினும் சிறப்பாகத் திருவைந்தெழுத்துள் மறைந்து நிற்கும் கள்வனாகிய அப்பெருமானது திருவைந்தெழுத்தே தாமாய் நிற்பவரே; பிறரல்லர்.
Special Remark:
`ஆகையால், அப்பயனைப் பெற விரும்புவோர் அம்மந்திரத்தையே செபிக்க` என்பது குறிப்பெச்சம். சிவபெருமான் பின்னர்க் குறிக்கப்படுதலின், ``மதித்த`` என்றும், ``மதித்திட`` என்றுமே கூறிப்போயினார். மதித்தல், இங்கு அதன் காரியம் தோன்ற நின்றது. பிறவியைப் பெற்றவனை, ``பிறவி`` என்றார், `அவன் ஒரு தெய்வப் பிறவி, அதிசயப்பிறவி` என்பன போல. மூன்றாம் அடியில் ``மறையவன்`` என்பதன்பின், `ஆயினும்` என்பது வருவிக்க. நான்காம் அடியில் அச்சொல்லின்பின் ஆறாவது விரிக்க.
இதனால், மேற்கூறிய ஐந்து எழுத்துக்களின் சிறப்பும் தொகுத்துக் கூறி, அவை ஒருங்கு தொடர்ந்து நின்ற மந்திரத்தது சிறப்புக் கூறப்பட்டது.