ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்

பதிகங்கள்

Photo

அவ்வியல் பாய இருமூன் றெழுத்தையும்
செவ்வியல் பாகச் சிறந்தனன் நந்தியும்
ஒவ்வியல் பாக ஒளியுற நோக்கிடின்
பவ்வியல் பாகப் பரந்துநின் றானே.

English Meaning:
See Lord in Five-Letter

Of greatness thus are Letters two and three,
And in it as His Radiant Form Nandi shone;
See Him as Letter ``OM``
Wide He Spreads unto Ocean Vast.
Tamil Meaning:
மேற்கூறியவாறு தனக்குத் திருமேனியாய் அமைகின்ற, பிரணவத்தோடுகூடி ஆறெழுத்தாய் நிற்கின்ற நகாரம் முதலிய ஐந்தெழுத்தினாலும் ஆகிய மந்திரத்தையே சிவபெருமான் தனக்கு நேர் வாயிலாகக் கொண்டு நிற்கின்றான். ஆகையால், அவனை அந்தப் பிரணவத்தின் காரியங்களாகிய ஏனை எழுத்துக் களையும் அவனது ஒளிக்கதிர்களாகப் பொருந்தக் கொண்டு தியானித்தால், அவன் தனது ஆனந்தக் கடலாய் அளவின்றி நிற்பான்.
Special Remark:
பிரணவம் இயல்பாகவே எல்லாமந்திரத்தின் முன்னும் நிற்குமாதலின், அதனை, ``இருமூன் றெழுத்தையும்`` என அனுவாத முகத்தாற் கூறினார். ``செவ்வியல்பாக`` என்றதன்பின், `கொண்டு` என ஒரு சொல் வருவிக்க. `ஓ` என்பது தொடை நோக்கிக் குறுகி நின்றது. அதனது காரியத்தை ``இயல்பு`` என்றார், பரிணாமமாகாது, விருத்தி யாதல் பற்றி. `ஒளியாக உறநோக்கிடில்` என மாற்றிக்கொள்க. `அனு வாதத்தாற் கூறிய ஓங்காரம் ஒளிப் பிழம்பாகிய திருவாசியாயும், அதனது விருத்தியாகிய அகாரம் முதலிய எல்லா எழுத்துக்களும், அத்திருவாசியின் மேல் விளங்கும் சுடர்களாயும் நிற்கும் என்பது மூன்றாம் அடியாற் குறித்தவாறு.
``ஓங்கார மேநல் திருவாசி; ஆங்கதனில்
நீங்கா எழுத்தே நிறைசுடராம்``
என்னும் உண்மை விளக்க வெண்பாவை (35) நோக்குக. `பவ்வம்` என்பது கடைக்குறைந்து நின்றது.
இதனால், மேலைச் சக்கரத்தில் கூறிய ஓங்காரமும், பிற எழுத்துக்களும் கூத்தப்பெருமானுக்குத் துணை உறுப்புக்களாய் (உபாங்கங்களாய்) நின்று பயன் தருதல் கூறப்பட்டது.