ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்

பதிகங்கள்

Photo

ஓதும் எழுத்தோ டுயிர்க்கலை மூவைஞ்சும்
ஆதி எழுத்தவை ஐம்பதோ டொன்றென்பர்
சோதி எழுத்தினில் ஐயிரு மூன்றுள
நாத எழுத்திட்டு நாடிக்கொள் ளீரே.

English Meaning:
Garland of Fifty-One Letters

With Letter ``Aum`` are vowels fifteen formed;
To Bindu`s luminous letter ``A``
Add Nada letter ``U``
With rest of letters thirteen,
They fifteen vowels are;
Together with consonants,
The Primal letters are
As Fifty and one reckoned.
Tamil Meaning:
உச்சரிக்கும் எழுத்தாகிய அகாரத்தோடு ஏனைய பதினைந்தும் உயிரெழுத்துக்களாம்; ஆயினும், `மூல எழுத்துக்கள் ஐம்பத்தொன்று` என்று மந்திர நூலார் கூறுவர். அவையெல்லாம் எவ் வாறாயினும், முதல்வனுக்குரிய முதன்மை மந்திரத்தில் மேற் சொல்லிய ஆறெழுத்துக்களே உள்ளன. அவற்றை நால்வகை வாக்கிலும் வைத்து ஆராய்ந்து கொள்ளுங்கள்.
Special Remark:
``அகரம், ஒலிப்பின் முதல் முயற்சியிலே தோன்றி எல்லா எழுத்துக்களிலும் கலந்து நிற்கும் சிறப்பினது; அதனால், அஃது உயிரெழுத்திற்கும் உயிராய் நிற்பது`` என்பார், ``ஓதும் எழுத்தோடு`` என அதனது இயல்பும், உயர்வும் தோன்ற ஒடுஉருபு கொடுத்து, வேறுவைத்து ஓதினார். இது பற்றியே இறைவன் அகரவடிவினன் எனக் கூறப்படுகின்றான். ``ஓதும் எழுத்து`` என்றது, `ஓதப்படும் - உச்சரித்தல் உண்டான பொழுதே தோன்றுகின்ற - எழுத்து` என்றவாறு, கலை - கூறு. `சொற்களது உறுப்பு` என்பதாம். `மூவைஞ்சும் உயிர்க்கலை` என மாறிக்கூட்டுக` ``அவை`` பகுதிப்பொருள் விகுதி. சோதி, இறைவன், நாத எழுத்து - நாதத்தின் காரியமாகிய எழுத்து; `பூதகாரியமாகிய எழுத்தாகக் கொள்ளுதலோடு ஒழியாது` என்றவாறு. `நாத எழுத்தில் இட்டு` என்க. `திருவைந்தெழுத்தை யோகமுறையால் நாத எழுத்தாக உணர்ந்து சுத்தமானதாகக் கணிக்க, சுத்த தத்துவத்தில் விளங்கிநிற்கும் தடத்த சிவனைத் தலைப்பட்டு அபரமுத்தியை எய்திப் பின் பரமுத்தியை எளிதிற்பெறலாம்` என்பது கருத்து.
இதனால், `மூல எழுத்துக்கள் ஐம்பத்தொன்று என்றாலும், அவற்றுள் உயிரெழுத்தாவன பதினாறே` என்பதும், `அவற்றுள்ளும் அகரம் உயிர்க்குயிராய எழுத்து` என்பதும், `எனினும், மேற்கூறிய ஆறெழுத்துக்கள் அவை எல்லாவற்றினும் மேம்பட்டன` என்பதும் கூறி, மேற்கூறிய மந்திரத்தின் சிறப்பு வலியுறுத்தப்பட்டது.
`ஐம்பத்தோரெழுத்து இவை` என்பதை மேற்காட்டிய பேரம்பலச் சக்கரத்துட் காண்க.