ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்

பதிகங்கள்

Photo

அவ்வென்ற போதினில் உவ்வெழுத் தாலித்தால்
உவ்வென்ற முத்தி உருகிக் கலந்திடும்
மவ்வென்றென் னுள்ளே வழிபட்ட நந்தியை
எவ்வண்ணஞ் சொல்லுகேன் எந்தை இயற்கையே.

English Meaning:
Chant Aum, Nandi Appears

When with ``A``, chant ``U`` simultaneously,
Then does melting Mukti there appear;
When ``Ma`` I chanted;
With me was ``Nandi``;
How shall I speak of my Father`s greatness!
Tamil Meaning:
அகாரத்தை உச்சரித்த உடனே உகாரத்தை உச்சரித்தால், மேலிடத்ததாக அறியப்படுகின்ற வீட்டின்பம் பொங்கி வழிந்து உயிரின்கண் கலக்கும். அந்த இரண்டெழுத்தையும் மகாரத்துடன் சேர்த்து உச்சரித்து என் உடலகத்தே நான் சிவனை வழிபட்ட செயலால் விளைந்த அவனது இன்பத்தை நான் எவ்வாறு பிறர்க்குச் சொல்லுவேன்! அவ்வின்பம் அத்தகையதாய் இருந்தது.
Special Remark:
முதலடி, மேற்கூறிய பிராணாயாம முறையை அனுவதித்தது. மேல் எடுத்துக் கூறாத மகாரத்தை இதனுள் எடுத்துக் கூறினார். உ என்ற - உகரச்சுட்டால் சுட்டப்பட்ட. `முத்தி, நந்தி` என்பன ஆகுபெயர்கள். `அருள் வழியே ஆனந்தம் பிறக்கும்` என்பதை விளக்க, `பெருகிக் கலக்கும்` என்னாது, `உருகிக் கலக்கும்` என்றார். ``இயற்கை`` என்றது, அவனுக்கு இயல்பாய் உள்ள இன்பத்தையேயாம். இதன்பின், `அன்னது` என்னும் பயனிலை வருவித்துக் கொள்க.
இதனால், மேற்கூறிய பிரணவயோக செபம் வீட்டின்பத்தைத் தருதல் கூறப்பட்டது.