ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்

பதிகங்கள்

Photo

வெளியில் இரேகை இரேகையில் அத்தலைச்
சுளியில் உகாரமாம் சுற்றிய வன்னி
நெளிதரு கால்கொம்பு நேர்விந்து நாதம்
தெளியும் பிரகாரஞ் சிவமந் திரமே.

English Meaning:
Yantra for Siva Mantra

In the Space Centre (Eye-brow)
There mark letter ``A``
At the top of cranium place letter ``U``
Surround with letter ``ma``
On its ``leg`` place Bindu letter ``Si``
On its ``horn`` place Nada letter ``Va``
This the Siva Mantra,
You clear shall know.
Tamil Meaning:
வெறுவெளியாய் யாதும் எழுதப் படாத பரப்பு ஒன்றில் ஒரு நேர்க்கோடு இழுத்து, அக்கோட்டின் தலையில் ஒரு சுழியை இட்டால் அஃது உகாரவடிவாய்த் தோன்றும். அதில் `கொம்பு` எனப்படுகின்ற சுழியும், நேர்க்கோடும் முறையே விந்துவிற்கும், நாதத்திற்கும் உரிய வரிவடிவமாகும். இனி அவையே `தீ, காற்று` என்னும் பூதத்திற்கு உரிய குறிகளாயும் நிற்கும். இவற்றை இவ்வாறு தெளிவதே சிவ மந்திரத்தை உணர்தலாகும்.
Special Remark:
இதில் சொல்லப்பட்ட வடிவம் - ``ƒ`` - என்பது. இதனைப் `பிள்ளையார் சுழி` என்பர். இதனைச் சுழி கீழாக ஆக்கினால் - `` `` - இவ்வாறாம். இதனையே ஏழாந் தந்திரத்துள் `ஆன்மலிங்கம்` என்னும் அதிகாரத்தில்,
``விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம்;
விந்துவதே பீடம்; நாதம் இலிங்கமாம்``.
எனக் கூறுவார். பூதங்களுள் தேயு (தீ) இலிங்கவடிவாய் நிற்றலாலும், அது கீழே சுழித்துக் கொண்டு மேலே கொழுந்துவிட்டு ஓங்குவது ஆதலாலும் சுழியை, `தீ` என்றும், செங்குத்து நேர்க்கோட்டினை, `காற்று` என்றும் கூறினார். தீ கொழுந்து விட்டு எரிதல் காற்றினால் என்பது வெளிப்படை. விந்து சத்தியும், நாதம் சிவமும் ஆதலின், இச்சுழியை இவ்வாறு தெளியும் உணர்வே சிகார வகாரங்கள் கூடிய சிவ மந்திரத்தைத் தெளிதலாய் முடியும் என்றார் என்க. எனவே, `மேற்கூறிய சக்கரங்களை யாதானும் ஒரு பரப்பில் பொறிப்பதற்கு முன்னே. மேலிடத்தில் இச்சுழியைப் பொறிக்க` என்பது குறிப்பு ஆயிற்று. `சுழி` என்பது எதுகை நோக்கித் திரிந்தது. சுளியில் - சுழித்தால் - `வெளியில் இரேகை உளதாக, இரேகையில் அத்தலைச் சுளியில்` என்க. அத்தலை - அதன் தலை. சுற்றிய - சுழித்தெழுந்த` ``கொம்பு, நேர்` என்பன, ``வன்னி, நேர்`` என்பவற்றுடன். எதிர் நிரல் நிறையாயும் ``விந்து, நாதம்`` `என்பவற்றுடன் முறை நிரல்நிறையாயும் இயையும். நெளிதரல் - நில்லாது இயங்குதல். பிரகாரம் - வகை. இதில் ``பிரகாரம்`` என்ற வடசொல்லின் இகரம் அலகு பெறாது நின்றது.
ஓங்காரம் உச்சரிக்கப்படுவதாய் நாதத்தை உணர்த்தி, மந்திரங்கட்கெல்லாம் முன்னிற்கும். `நாதம்` என்பதனானே அதனை, `ஊமை யெழுத்து` என்பர். எனினும், இங்குக் கூறிய இவ்வடிவம் யாதோர் உச்சரிப்பையும் உடையதாகாமையால், உண்மை ஊமை எழுத்தாய், விந்து நாதங்களாய் நிற்கும். அதனானே, எவற்றையேனும் வரிவடிவு எழுத்தால் எழுதத் தொடங்குமுன் முதலில் இவ்வடிவினை எழுதுதல் மரபாயிற்று. `அம்மரபினை இங்குக் கூறிய சக்கரங்கட்கும் கொள்க` என்பது இதனால் உணர்த்தினார். எனவே, இம்மந்திரம் மேற்கூறிய சக்கரங்களைப் புறத்தில் புலப்பட அமைக்கும்பொழுது முதற்கண் செயற்பாலது ஒரு மரபு செயலினைக் கூறியதாயிற்று.