ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்

பதிகங்கள்

Photo

மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது
உந்தியி னுள்ளே உதயம்பண் ணாநிற்கும்
சந்திசெய் யாநிற்பர் தாம தறிகிலர்
அந்தி தொழுதுபோய் ஆர்த்தகன் றார்களே.

English Meaning:
Ha(m)sa is Hara`s Mantra

``Ha`` and ``Sa`` together form Hara`s mantra (Hamsa)
But none know the truth of Hamsa;
When that truth any one knows
He shall know Hamsa as beginningless.
Tamil Meaning:
மேல், ``நல்ல எழுத்து`` எனப்பட்ட அந்த ஓர் எழுத்தே, அக மலர்களாகிய ஆதார பங்ககயதந்தோறும் பலவகை யாகக் காட்சிப்படும். அது மூலாதாரத்தில் நிற்பதாயினும், சுவாதிட் டானத்தில் கும்பிக்கப்பட்ட பிராண வாயுவாய் மேலெழுந்து மணி பூரகம் முதலாக விளங்கத் தொடங்கும். சந்திக்காலங்களில் சந்திவழி பாட்டினைத் தவறாது செய்பவர்களுங்கூட, `அவ்வழிபாடு இக் காட்சியை எய்துதற்கு வழி` என்பதை அறிவதில்லை. ஏதோவோர் ஒழுக்கமாகக் கருதி அந்தியிலுங்கூடத் தவறாமல் அவ்வழிபாட்டினை முடித்து, வேறு செயல் செய்யச் சென்றுவிடுகிறார்கள்.
Special Remark:
`ஒன்றே` என்னும் தேற்றேகாரம் தொகுத்தலாயிற்று. ``மலரில்`` என்பதில், `ஆல்` உருபு, `தொறுப்` பொருளில் வந்தது. ஆர்த்தல் - நிரப்புதல். பிரணவம் பல்வேறு கலைகளாய் ஆதாரந் தோறும் நிற்குமாறு, மூன்றாம் தந்திரத்துள் `கலை நிலை` என்னும் அதிகாரத்துட் குறிக்கப்பட்டது.
இதனால், சந்திவழிபாடு முதலியவை வாயிலாக, மேற்கூறிய பிரணவக் காட்சியைப் பெற முயலுதல் வேண்டும் என்பதும் கூறப் பட்டது.