ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்

பதிகங்கள்

Photo

 விந்துவி லும்சுழி நாதம் எழுந்திடப்
பந்தத் தலைவிபதி னாறு கலையதாய்க்
கந்தர வாகரம் கால்உடம் பாயினாள்
அந்தமும் இன்றியே ஐம்பத்தொன் றாயதே.

English Meaning:
Sakti Expands as Fifty-One Letters

With Letter ``A`` that is Bindu,
And curled Letter ``U`` that is Nada,
When together they upward ascend,
Sakti within beams,
With kalas six and ten,
And endlessly expands,
As neck, hands, legs and body entire;
As Letters One and Fifty, too,
Her Form expands.
Tamil Meaning:
சுத்த மாயையினின்றும் ஓங்காரமாய் நாதம் தோன்ற, அந்த நாதத்தின் தலைவியாகிய குண்டலினி சக்தி, பதினாறு கலைகளையுடைய பிரணவமே தானாகி மக்களது உடம்பில் `தலை, கால், உடல்` என்னும் உறுப்புக்களில் நிற்கின்றாள். அவள் ஒன்றி நிற்கப் பெறுதலே பிரணவம் அழிவின்றி மேற்கூறிய ஐம்பத்தோரெழுத் தாயிற்று.
Special Remark:
``சுழி`` என்றது ஒங்காரத்தின் வடிவத்தை. `சுழியாய்` என, ஆக்கம் வருவித்துக்கொள்க. நாதமாவது வாக்கு. உயிர்களைப் பிணித்துள்ள பந்தங்களில் நீக்குதற்கரிய பரமபந்தமாய் நிற்பது வாக்காதலின், அதனையே ``பந்தம்`` என்றார். `பதினாறுகலைகள் இவை` என்பதும், அவை உடம்பில் நிற்கும் இடங்களும் மேல் மூன்றாம் தந்திரத்துள் `கலைநிலை` அதிகாரத்திற் காட்டப்பட்டன. கந்தரம் - கழுத்து. ஆகாரம் என்பது குறுகி நின்றது. ஆகாரம் - வடிவம். கழுத்தோடு கூடிநிற்கும் வடிவம் தலை. ``அந்தம் இன்றி ஆயது`` என்றது `அக்கரம்` (அட்சரம்) எனப்பட்டது என்றவாறு. இதனால், `உண்மை அக்கரம் குண்டலினிசத்தியே என்பதும், அவட்கு இடமாதல் பற்றியே வாக்கின் வடிவாக எழுத்துக்கள், `அக்கரம்` என உபசரித்துக் கூறப்படுகின்றன` என்பதும் பெறப்பட்டன. உண்மை விளக்கத்துள், `திருவைந்தெழுத்து ஏனையெழுத்துக்கள் போல அழியும் எழுத்துக்கள் அல்ல` (40, 41) எனக் கூறியதையும் இவ்விடத்து நினைவுகூர்க. ``அந்தமும்`` என்ற உம்மை `ஆதியின்றி` என இறந்தது தழுவிய எச்சம். ``ஆயது`` என்பதற்கு, `அது` என்னும் எழுவாய் வருவிக்க. அச்சுட்டுப் பெயர், முன்னர், ``பதினாறு கலைய`` என்ற பிரணவத்தைக் குறிக்கும்.
இதனால், `மேற்கூறிய ஆறெழுத்தின் பொருளாகிய சிவனுடைய சத்தியினது சார்பு காரணமாகவே பிரணவமும், அதன் காரியமாகிய எழுத்துக்களும் சிறப்புற்றன` என்பது கூறப்பட்டது.